மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய T20I அணியை பொருத்தவரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி போன்ற வீரர்களுக்கு ஓய்வை வழங்கி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வந்தது.
>> இலங்கை – ஆப்கான் T20I தொடருக்கான டிக்கெட் விலைகள் வெளியானது
இதன் காரணமாக T20 உலகக்கிண்ணத்திலும் ஹர்திக் பாண்டியா அணியின் தலைவராக செயற்படுவார் எனவும், ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா, ரோஹித் சர்மா T20 உலகக்கிண்ணத்தில் இந்திய அணியின் தலைவராக செயற்படுவார் என்ற விடயத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி ரோஹித் சர்மா அணியின் தலைவராகவும், ஹர்திக் பாண்டியா உப தலைவராகவும் செயற்படுவர் என இலங்கை கிரிக்கெட் ஜெய் ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் குறிப்பிட்ட ஜெய் ஷா, “இந்த சந்தர்ப்பத்தில் இந்திய அணியின் அனைத்து வகை போட்டிகளுக்குமான தலைவர் ரோஹித் சர்மா. தேர்வாளர்கள் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளனர். ஹர்திக் பாண்டியா அணியின் உப தலைவர். ஹர்திக் பாண்டியாவுக்கு தொடர் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த உலகக்கிண்ணத்திலும் இதுபோன்ற சூழ்நிலை உருவாகியிருந்தது. எனவே அணித்தலைவர் தொடர்பில் சிக்கல்கள் ஏற்படும்.
இறுதியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் தொடரை எடுத்துக்கொண்டால் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம். குறித்த சந்தர்ப்பத்தில் ரோஹித் சர்மா அணியை மீட்டார். அவருடைய திறமை மீது எந்தவித கேள்விகளும் இல்லை. உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டியை தவிர்த்து ஏனைய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றோம். அது விளையாட்டின் ஒரு பகுதி மாத்திரமே” என்றார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<