பந்தை சேதப்படுத்திய நிகோலஸ் பூரானுக்கு போட்டித்தடை

50

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரரான நிகோலஸ் பூரானுக்கு பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) நான்கு சர்வதேச போட்டிகளில் ஆட தடைவிதித்திருக்கின்றது. 

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (11) லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 24 வயது நிரம்பிய நிகோலஸ் பூரான், தனது கட்டை விரல் மூலம் பந்தினை சேதப்படுத்தியது போட்டிக் காணொளியில் பதிவாகியது. இந்தக் காணொளியை ஆதாரமாக கொண்டே நிகோலஸ் பூரான் குற்றவாளியாக இனம் காணப்பட்டு போட்டித் தடையினையும் பெற்றிருக்கின்றார். 

கோல்ட்ஸ் அணிக்காக சதம் விளாசிய அவிஷ்க பெர்னாந்து

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), உள்ளூர் கழங்கள் இடையே நடாத்தும் மேஜர் எமர்ஜிங்…

நிகோலஸ் பூரான் தனது இந்த போட்டித் தடையின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடும் அடுத்த நான்கு T20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றார். அதன்படி நிகோலஸ் பூரான் விளையாட முடியாத T20 போட்டிகளாக ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான T20 தொடரின் மூன்று போட்டிகள் மற்றும் இந்திய – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியும் அமைகின்றன.  

இன்னும் சர்வதேச கிரிக்கெட் வாரியம், நிகோலஸ் பூரானின் குற்றத்தினை மூன்றாம் நிலைக் குற்றமாக வகைப்படுத்தி அதற்காக ஐந்து தகுதி இழப்பு புள்ளிகளையும் அவருக்கு வழங்கியிருக்கின்றது. 

இதேநேரம், தான் செய்த தவறு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த நிகோலஸ் பூரான் அதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கோரியிருக்கின்றார்.  

”திங்கட்கிழமை லக்னோவில் நடைபெற்ற தவறுக்காக நான் அனைவரிடமும் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். நான் கடுமையான தவறு ஒன்றினை செய்திருப்பதை உணர்ந்திருப்பதோடு அதற்கான ஐ.சி.சி. இன் தண்டனையையும் ஏற்றுக்கொள்கின்றேன். அதோடு, இது மாதிரியான மற்றுமொரு தவறு இனிவரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் உறுதி செய்கின்றேன். அதோடு, இந்த தவறில் இருந்து பாடம் கற்று எதிர்வரும் காலத்தில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவேன்.”

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<