பாகிஸ்தான் சுப்பர் லீக்ககை அபுதாபியில் நடத்த அனுமதி

Pakistan Super League - 2021

120
PSL Twitter

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) T20 தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிரய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 கிரிக்கெட் தொடர் கராச்சியில் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற 2 வெளிநாட்டு வீரர்கள் முதலில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், கடந்த வாரம் மேலும் நான்கு வீரர்கள் மற்றும் ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது PCR பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

ஆறு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சுப்பர் லீக் ஒத்திவைப்பு

எனவே, கொரோனா பரவல் எதிரொலியாக முன்னணி வெளிநாட்டு வீரர்கள் சிலர் தொடரில் இருந்து விலகி தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து, பாகிஸ்தான் சுப்பர் லீக் அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உடனடியாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கை தள்ளிவைப்பதாக அறிவித்தது.

இந்த வருட பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 34 போட்டிகளில் 14 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த வேண்டும் என அணி உரிமையாளர்கள் அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கை ஜுன் மாதம் நடத்த தீர்மானம்

இதனையடுத்து ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை மற்றும் அந்த நாட்டு அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் ஒத்திவைக்கப்பட்ட 6ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 போட்டி அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, எஞ்சியுள்ள 20 போட்டிகளும் ஜுன் மாதம் நடைபெறும் என  பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் விரைவில்  இதற்கான திகதிகள் அறிவிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…