கௌண்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட மொஹமட் அப்பாஸ்!

119
ICC

இங்கிலாந்து கௌண்டி அணியான நொட்டிங்கம்ஷையர் கழகம், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் அப்பாஸின் இவ்வருடத்துக்கான ஒப்பந்தத்தை நீக்கியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மொஹமட் அப்பாஸினை 9 போட்டிகளில் விளையாடுவதற்கு நொட்டிங்கம்ஷைர் கழகம் ஒப்பந்தம் செய்திருந்தது. எனினும், கொவிட்-19 வைரஸ் காரணமாக இங்கிலாந்தின் கிரிக்கெட் முடங்கிப்போயுள்ளதால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய வேகப் பந்துவீச்சு குழாத்தில் உள்ள மகிமை

அதேநேரம், பாகிஸ்தான் அணி எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இங்கிலாந்துக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. குறித்த தொடருக்கான 29 பேர்கொண்ட குழாத்தில், மொஹட் அப்பாஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், மொஹமட் அப்பாஸை முழுமையாக அணி ஒதுக்கவில்லை எனவும், அடுத்தடுத்த பருவகாலங்களில் அவர் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் எனவும் அந்த அணியின் பணிப்பாளர் மைக் நெவல் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த பருவகாலத்தில் இங்கிலாந்தில் மொஹமட் அப்பாஸ் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவார் என நம்புகிறோம். அதனை நாம் பார்வையிடுவதற்கு ஆவலாக உள்ளோம். அவரது திறமை மற்றும் அனுபவம் என்பன இங்கிலாந்து மண்ணில் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். 

ஆனால், இந்த பருவகாலத்தில் அவரை அணியில் இணைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால், அவரை அணியில் இருந்து முழுமையாக நீக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் அவர் அணியுடன் இணைத்துக்கொள்ளப்படலாம்” என்றார்.

கொவிட்-19 வைரஸ் காரணமாக பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கௌண்டி அணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக செட்டேஸ்வர் புஜாரா, க்ளென் மெக்ஸ்வேல், ஜேம்ஸ் போல்க்னர், பி.ஜே.வெட்லிங் மற்றும் அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். கௌண்டி கிரிக்கெட்டின் இந்த பருவகாலம் எதிர்வரும் ஆகஸ்ட் ஒன்றுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<