மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பும் நிரோஷன் டிக்வெல்ல

361

இந்திய அணிக்கு எதிராக நடைபறெவுள்ள தொடருக்கான இலங்கை குழாத்தில், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல இணைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் எமது இணைத்தளத்துக்கு கிடைத்துள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20I தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. முதல் மூன்று போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், நான்காவது போட்டி இன்றைய தினம் (18) நடைபெறுகிறது.

அவுஸ்திரேலிய தொடரிலிருந்து வெளியேறும் நுவன் துஷார

குறித்த இந்த தொடர் நிறைவடைந்தவுடன் இலங்கை அணி நேரடியாக இந்தியா செல்லவுள்ளதுடன் 24ம் திகதி முதல் T20I போட்டி லக்னோவில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இலங்கையில் நடைபெற்றுவரும் டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்திவரும் நிரோஷன் டிக்வெல்ல அணியுடன் இணைந்துக்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரோஷன் டிக்வெல்ல டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கின் இறுதி லீக் போட்டியில் 107 பந்துகளில் 135 ஓட்டங்களை விளாசியதுடன், மொத்தமாக ஒரு சதம் மற்றும் ஒரு அரைச்சதம் அடங்கலாக 339 ஓட்டங்களை குவித்துள்ளார். எனவே, இவர் இந்திய டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார் என்ற உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இவர் T20I தொடரில் விளையாடுவாரா என்பது இதுவரை குறிப்பிடப்படவில்லை.

கடந்த வருடம் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது, உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் கிரிக்கெட் சபையின் தடைக்கு முகங்கொடுத்திருந்தனர். மெண்டிஸ் மற்றும் குணதிலக்க ஆகியோர் அவுஸ்திரேலிய தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்ட நிலையில், நிரோஷன் டிக்வெல்ல முதன்முறையாக தேசிய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

நிரோஷன் டிக்வெல்லவுடன் இந்திய டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவித்துள்ள சுரங்க லக்மாலுடன், அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடன் தனன்ஜய டி சில்வா, இளம் வீரர் அஷைன் டேனியல், சாமிக்க குணசேகர போன்றோரும் இணைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதுவரை அணிக்குழாம் உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<