மூன்றாவது தடவையாக ஒலிம்பிக் செல்கிறார் நிலூக கருணாரத்ன

Tokyo Olympics - 2021

146

இலங்கையின் பெட்மிண்டன் நட்சத்திரமான நிலூக கருணாரத்ன இவ்வருடம்  இடம்பெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளார். 

இதன்மூலம், இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட ஆறாவது இலங்கை வீரராக இவர் இடம்பிடித்தார்.

அத்துடன், முன்னாள் பெட்மிண்டன் நட்சத்திரம் நிரோஷன் விஜேகோனுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெட்மிண்டன் வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட இவர், 2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் 2016 றியோ டி ஜெனீரோ ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்த இலங்கையின் மில்கா கிஹானி

இதன்படி, ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தடவையாகப் பங்குபற்றுகின்ற வாய்ப்பையும் அவர் பெற்றுக்கொண்டார்

இதனிடையே, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இலங்கை அணியின் தலைவராகச் செயல்பட்ட நிலூக கருணார்தன, முதல் போட்டியில் உலக பெட்மிண்டன் தரவரிசையில் 8ஆம் இடத்தில் இருந்த ஜப்பான் நாட்டு வீரரை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

இதேவேளை, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து தடவைகள் பொதுநலவாய விளையாட்டு விழாவிலும், இரண்டு தடவைகள் ஆசிய பெட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்றுள்ள நிலூக கருணாரத்ன, இதுவரை 10 சர்வதேச பெட்மிண்டன் பட்டங்களை வென்றுள்ளார்

இலங்கையின் முன்னாள் பெட்மிண்டன் சம்பியனான 36 வயதான நிலூக கருணாரத்ன, 2013இல் உலக பெட்மிண்டன் தரவரிசையில் 34ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

சுவீடனில் வளர்ந்து இலங்கை சார்பாக ஒலிம்பிக் செல்லும் மெட்டில்டா கார்ல்சன்

இதுஇவ்வாறிருக்க, நான்கு மாதங்களுக்கு முன்பு (ஜனவரி) அவரது தம்பியும், கிரிக்கெட் வீரருமான சாமிக்க கருணாரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக நிலூக கருணாரத்னவும் கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டார்

எதுஎவ்வாறாயினும், இம்முறை டோக்கியோ ஒலிம்பிப்பில் இலங்கை அணியின் தலைவராக மீண்டும் நிலூக செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தேசிய ஒலிம்பிக் குழு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இதுவரை ஆறு வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர். குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்ல்சன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல, நீச்சல் வீரர் மெத்யூ அபேசிங்க மற்றும் நீச்சல் வீராங்கனை அனிக்காஹ் கபூர் ஆகியோரோ இவ்வாறு தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…