மலேஷிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான விரன்தீப் சிங் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் கோல் கேலண்ட்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டுள்ளார்.
>>ஓவல் டெஸ்டில் ஓய்வு பெறும் ஒல்லி ரொபின்சன்<<
கோல் கேலன்ட்ஸ் அணியில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐக்கிய அரபு அமீரக சுழல்வீரர் ஹைதர் அலி, அவரது தேசிய அணியின் பொறுப்புக்கள் காரணமாக LPL தொடரில் இருந்து விலகிய நிலையில் இவரின் மாற்றீடு வீரராகவே விரன்தீப் சிங் இணைந்துள்ளார்.
அதேநேரம் ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடுகளின் (Associate Nation) வீரர் ஒருவருக்கு தொடரில் பங்கெடுக்கும் அணிகள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற LPL தொடர் புது விதிமுறைக்கு அமைய கோல் கேலண்ட்ஸ் அணிக்கு, அங்கத்துவ நாடுகளில் ஒன்றான மலேஷியாவைச் சேர்ந்த விரன்தீப் சிங் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் LPL 2026ஆம் ஆண்டு தொடரின் வீரர்கள் வரைவின் மூலம் ஹைதர் அலி முதலில் கோல் கேலண்ட்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விரன்தீப் சிங்கை ஒப்பந்தம் செய்ய அந்த அணி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்தது.
வலதுகை துடுப்பாட்ட வீரராகவும் இடதுகை சுழற்பந்துவீச்சாளராகவும் காணப்படும் விரன்தீப் சிங் இதுவரை 122 T20 போட்டிகளில் விளையாடி 3,000 இற்கும் அதிகமான ஓட்டங்களைக் (Runs) குவித்துள்ளதுடன், 120 இற்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரானது, ஜூலை 17 முதல் ஒகஸ்ட் 08 வரை இலங்கையின் நான்கு வெவ்வேறு மைதானங்களில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















