தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான இலங்கை குழாத்தில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரண உபாதை காரணமாக விலகியுள்ளார்.
>>அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் இலங்கை
இந்த நிலையில் அவருக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளரான டில்ஷான் மதுஷங்கவை இலங்கை குழாத்தில் ஐ.சி.சி. (ICC) இன் உலகக் கிண்ணத்திற்கான தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (16) பல்லேகலேவில் நடைபெற்றிருந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான குழு நிலை மோதலின் போது, தனது முதல் ஓவரின் 4ஆவது பந்தை வீசிய நிலையில் மதீஷ பதிரண இடது காலில் ஏற்பட்ட வலியால் மைதானத்திலிருந்து வெளியேறினார். இலங்கை 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற அந்த போட்டியில் பதிரண மீண்டும் களமிறங்கவில்லை.
இந்த நிலையில் மதீஷவின் தசை உபாதை குணமாக சில வாரங்கள் தேவைப்படும் என குறிப்பிட்டப்பட்டிருப்பதோடு, இதனை கருத்திற் கொண்டே அவர் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வனிந்து ஹசரங்க உபாதைக்குள்ளாகி T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், பதிரணவின் விலகல் இலங்கை அணிக்கு இரண்டாவது பெரிய பின்னடைவாக மாறியது.
மதீஷவின் பிரதியீட்டு வீரராக இணைந்துள்ள டில்ஷான் மதுஷங்க கடந்த ஒகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் விளையாடிய நிலையில், தொடர்ச்சியாக உபாதைகளால் அவதிப்பட்டு வந்திருந்தார். இந்த நிலையில் டில்சான் மதுசங்க அண்மையில் ஓமானுக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை A அணிக்காக விளையாடியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>டெல்லி கெபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்
25 வயது நிரம்பிய மதுசங்க இதுவரை 15 T20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. அதேநேரம் இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயை கொழும்பில் வைத்து எதிர்கொள்ளவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 22) கண்டி பல்லேகலையில் இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 8 போட்டியில் இலங்கை விளையாடவுள்ளது.






















