மாலிங்கவுக்கு ஆதரவாகப் பேசிய மஹேல

4667

இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, இங்கிலாந்துடன் நடைபெற்ற லீக் போட்டியின் போது உடைமாற்றும் அறையில் சட்டை இல்லாமல் இருந்த புகைப்படம் கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் (21) நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி  யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி வைத்தியம் அளித்து வெற்றியைப் பதிவு செய்தது. இலங்கை அணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலிங்க ஒரு வரலாற்று சாதனையாளர் – திமுத் கருணாரத்ன

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக…

இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசிய மாலிங்க 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அவரின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்தின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜொனி பெயஸ்ட்ரோவை டக் அவுட் செய்து ஓய்வறை திருப்பினார். பின் 6ஆவது ஓவரில் இங்கிலாந்தின் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் வின்சும் மாலிங்கவின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து 30ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் நிதானமாக விளையாடி வந்த ஜோ ரூட் ஆட்டமிழந்தார். அதன்பின் இங்கிலாந்தின் கடைசி ஆயுதமான ஜோஸ் பட்லரையும் அதே ஓவரிலேயே மாலிங்க ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்த நிலையில் சட்டை இல்லாமல் இருக்கினற் மாலிங்கவின் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அதுகுறித்து பலர் தமது அதிருப்தியையும், விமர்சனங்களையும் வெளியிட்டிருந்தனர்.

அதேபோல, இந்தப் போட்டிக்கு முன்பாக மாலிங்கவின் தொப்பையை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள்.  malinga belly என்ற டுவிட்டரில் டிரெண்ட் கூட செய்தனர். அவர் சட்டை இல்லாமல் தொப்பையோடு இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தொப்பைதான் இங்கிலாந்து சிக்ஸ் பேக்கை பேக் (pack) செய்து வீட்டிற்கு அனுப்பியது.

இது இவ்வாறிருக்க, இம்முறை உலகக் கிண்ணத்தில் ஐ.சி.சியின் விசேட தூதுவராக உள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன, மாலிங்கவின் அந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் நெகிழ்ச்சிகரமான கருத்து ஒன்றை வெளியிட்டார்.

இது மாலிங்கவின் SIX PACK குறித்த விடயம் அல்ல. அவருடைய திறமை குறித்த விடயமாகும். மாலிங்க அவருடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அவர் கடந்த சில வருடங்களாக இவ்வாறு தான் இலங்கை அணிக்குத் தேவையான நேரத்தில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பந்து வீசினோம் – மாலிங்க

இங்கிலாந்ததை வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பந்து வீசியதால்…

உண்மையில் அவர் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் புதிய பந்தில் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார். அனுபவமிக்க வீரரொருவர் மிகப் பெரிய போட்டித் தொடரொன்றில் திறமைகளை வெளிப்படுத்துவார். அதைத் தான் மாலிங்கவும் செய்தார். இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களாக ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரது விக்கெட்டுக்களை அவர் கைப்பற்றியது பாராட்டத்தக்கது. உண்மையில் அவர்கள் இருவரும் தான் இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருந்த வீரர்கள்.

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி கண்டிப்பாக தோல்வி அடையும் என்று நினைத்தவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை பரிசாக கொடுத்துள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் அணிகளில் ஒன்றாகவும் மாறிவிட்டது எனவும் மஹேல ஜயவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இங்கிலாந்துக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட மஹேல, இது இலங்கை அணி பெற்றுக்கொண்ட மிகப் பெரிய வெற்றியாகும். இது உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு சாதகத்தைக் கொடுக்கும். எமக்கு அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது.

இதன் பிறகு புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களிலும் உள்ள அணிகள் தமக்கெதிராக போட்டியிடவுள்ளன. இதனால் புள்ளிகளில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். நியூசிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது.

எனவே, இது பங்களாதேஷ் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக மாறிவிட்டது. எனவே அந்த அணிகள் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இங்கிலாந்தை சோதித்து பல சாதனைகள் படைத்த இலங்கை

சர்வதேச கிரிக்கட்டில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய அணி…

இம்முறை உலகக் கிண்ணத்தில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, 2 வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் 2 போட்டிகள் முடிவற்ற நிலையில் 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. எனவே எஞ்சியுள்ள 3 போட்டிகளில் குறைந்தபட்சம் 2 இல் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<