இலங்கை கிரிக்கெட் அணியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

3244

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தொடர் தோல்விகளினால் அடுத்த வார பிற்பகுதியில் ஆரம்பமாகவிருக்கும் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின் போதான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி,  அதன் பின்னர் நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற டெஸ்ட் தொடரினையும் பறிகொடுத்திருந்தது.

மாலிங்க – திசர – மெதிவ்ஸை ஒரே மேசையில் சந்திக்கவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சிரேஷ்ட வீரர்களான லசித்….

இது மட்டுமில்லாது இலங்கை அணி தற்போது அவுஸ்த்திரேலிய அணியுடன் நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் (2-0 என) வைட்வொஷ் செய்யப்பட்டிருக்கின்றது.

இதனால், தென்னாபிரிக்க அணியுடன் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன அணித்தலைவராக பொறுப்பேற்பார் என நம்பப்படுகின்றது.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் இலங்கை அணி இறுதியாக ஆடிய இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் எதிர்பார்த்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறியிருந்தார். இதில், நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் 22.66 என்கிற மோசமான சராசரியோடு 68 ஓட்டங்களையே பெற்ற தினேஷ் சந்திமால், அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் வெறும் 24 ஓட்டங்களையே குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக தொடர்ந்தும் மிகவும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்துவதினாலேயே தினேஷ் சந்திமாலை இலங்கை அணி விடுவிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இலங்கை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் தினேஷ் சந்திமால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே உபாதைக்கு ஆளாகி ஓய்வில் இருக்கும் அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்சலோ மெதிவ்ஸ் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற ஆஸி.

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…..

மெதிவ்ஸ் இல்லாதது இலங்கை அணிக்கு வருத்தம் தரும் விடயம் எனினும், அவருக்கு பதிலாக இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறையினை தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிகளின் போது அறிமுக வலதுகை துடுப்பாட்ட வீரரான ஒசத பெர்னாந்து வலுப்படுத்துவார் என நம்பப்படுகின்றது.

சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடிவரும் 26 வயதான ஒசத பெர்னாந்து இந்தப்பருவகாலத்திற்கான இலங்கை கிரிக்கெட் சபையின் மேஜர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் (ஆறு சதங்கள், நான்கு அரைச்சதங்கள் அடங்கலாக) 1,181 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், உள்ளூர் போட்டிகளில் திறமை காட்டி வந்த மற்றுமொரு வீரரான வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸிற்கும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு இன்னிங்சுகளிலும் இரட்டைச் சதமடித்த அஞ்செலோ பெரேரா

BRC அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடிவரும் 23 வயதேயான மொஹமட் சிராஸ் இந்தப்பருவகாலத்தில் 34.13 என்கிற பந்துவீச்சு சராசரியோடு 23 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இதேநேரம் சிராஸ் அண்மையில் நடைபெற்று முடிந்த அயர்லாந்து A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரிலும் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாகச் செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார, நுவான் பிரதீப் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் உபாதைக்குள்ளாகியதன் அடிப்படையிலேயே மொஹமட் சிராஸிற்கு இலங்கை டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

மறுமுனையில் தற்போது உள்ளூர் போட்டிகளில் அசத்தி வரும் துடுப்பாட்ட வீரர்களான கெளசால் சில்வா மற்றும் மிலிந்த சிறிவர்த்தன ஆகியோரும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அது இன்னும் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.

>>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<<