சந்திமாலின் சதத்துக்காக காத்திருந்த கிரிக்கெட்டின் தாயகம்!

123
Mathews and Chandi
(Photo by Paul Gilham/Getty Images)

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின்  லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுவது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரதும் கனவாகும். அப்படி, விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், அங்கிருக்கும் மதிப்புமிக்க கௌரவ பட்டியலில் தமது பெயரும் இருக்க வேண்டும் என்பது அடுத்த கனவாக மாறிவிடும்.  

கங்குலியுடன் என்ன நடந்தது? – கருத்து வெளியிட்டார் ரசல் அர்னோல்ட்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ரசல் அர்னோல்ட்..

அப்படி கிரிக்கெட் வீரர்கள் காணும் மிகப்பெரிய கனவினை வெறும் 22 வயதில் ஒரு வீரர் கடக்கின்றார் என்றால், அதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இப்படி சாதனை படைக்கப்பட்ட இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதிய 2011ம் ஆண்டு போட்டியின் வர்ணனையாளர் வர்ணனையில், “இலங்கை அணிக்காக 22 வயதான இளம் தினேஷ் சந்திமால் லோங் ஓன் பகுதியில் அடித்த அபாரமான துடுப்பாட்டத்துடன், தனது சதத்தை லோர்ட்ஸ் மைதானத்தில் பெற்றுக்கொள்கிறார். எதிர்காலத்தில் இவர் எதிர்பார்க்கக்கூடிய வீரர்” என்றார்.

வர்ணனையாளர் கூறியதைப் போன்று சந்திமாலின் எதிர்காலம் அமையாத போதும், லோர்ட்ஸ் மைதானத்தில் இன்றுவரையும் மறக்கமுடியாக ஒரு இன்னிங்ஸாக சந்திமாலின் இந்த இன்னிங்ஸ் பார்க்கப்படுகிறது. வெற்றியிலக்கொன்றை இலங்கை அணி துரத்தியிருந்த போது, இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடிய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு இளம் சந்திமால் விளையாடிய விதம் யாராலும் மறக்க முடியாது. 

ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்! தினேஷ் சந்திமால் சதம் அடிக்காவிட்டாலும் இலங்கை அணி போட்டியில் வெற்றிபெற்றிருக்கும். சந்திமால் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டிருப்பார். ஆனால், அந்த இன்னிங்ஸ் 9 ஆண்டுகளுக்கு பின்னரும் பேசப்பட்டிருக்குமா? என்பதில்தான் சந்தேகம். சந்திமால் தன்னுடைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் பெற்றிருந்தாலும், லோர்ட்ஸ் மைதானத்தில் பெற்ற சதம் தான் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

“இவ்வாறான மைல்கல்லொன்றை எட்டுவதற்கு முழு காரணமும் அஞ்செலோ மெதிவ்ஸ்தான். அவர்தான் முழுமையான ஆதரவை தந்தார்” என  திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமாலுடன் நடத்திய விஷேட நேரடி கலந்துரையாடலின் போது தினேஷ் சந்திமால் தெரிவித்தார். உண்மையில் இந்த சதத்துக்கான முழு பங்களிப்பையும் மெதிவ்ஸ்தான் வழங்கியிருந்தார். மெதிவ்ஸ் விளையாடிய 21 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்று, சந்திமால் சதம் பெற உதவியிருந்தார்.  

“நான் 87 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தேன். வெற்றிக்கு 18 அல்லது 19 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்தது. அதன்போது, திலின கண்டம்பி ஆட்டமிழந்து வெளியேற, மெதிவ்ஸ் களமிறங்கினார். இந்த தருணத்தில் மேலதிக வீரராக இருந்த அஜந்த மெண்டிஸ் களம் நுழைந்து, சந்திமாலை சதமடிக்க விடுங்கள் என கூறிச்சென்றார்” என சந்திமால் மேலும் சுட்டிக்காட்டினார்.

அஜந்த மெண்டிஸ் கூறும் வரையில் சந்திமால் தான் சதத்தை நெருங்கியிருப்பதை அறியவில்லை என குறிப்பிட்டார். “மெண்டிஸ் கூறியதற்கு பின்னர் தான் எனக்கு சதம் அடிக்க வாய்ப்பிருந்ததை அறிந்துக்கொண்டேன். அதுவரை போட்டியின் வெற்றியில் நான் அவதானம் செலுத்தியிருந்தேன்” என்றார்.

அதன்போது, “சரி சந்திமால். நீங்கள் சதம் அடிப்பதற்கு நான் உதவுகிறேன்” என மெதிவ்ஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி 44 பந்துகளுக்கு 17 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், சந்திமாலுக்கு 13 ஓட்டங்கள் சதத்துக்காக தேவைப்பட்டது. கேட்பதற்கு இலகுவாக இருந்தாலும், சந்திமால் சதம் பெறுவதில் சிக்கல்கள் காணப்பட்டன.

போட்டிகளை முடிவுக்கு கொண்டுவருவதில் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்த மெதிவ்ஸ், தனக்கு எதிராக வீசப்பட்ட எந்தவொரு பந்துக்கும் ஓட்டங்களை பெற முற்படாமல், அமைதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் 24 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 47வது ஓவரை முழுமையாக ஓட்டங்கள் அற்ற ஓவராக மெதிவ்ஸ் மாற்றினார். இதனால், இலங்கை அணிக்கு 18 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன்போது, அணித் தலைவர் திலகரட்ன டில்ஷான் தனது அமைதியை இழந்து, இருவரையும் போட்டியை முடிக்குமாறு பெவிலியனிலிருந்து கூறினார். எனினும், மெதிவ்ஸ் அமைதியாக இருந்து சந்திமால் சதம் பெறுவதற்கு உதவினார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆசைப்படும் திசர பெரேரா

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 2009ம் ஆண்டு அறிமுகமாகியிருந்த இலங்கை..

“போட்டி நாம் நினைத்ததை விட 2-3 ஓவர்கள் தள்ளிச்சென்றது. மெதிவ்ஸ் நான் சதம் பெறவேண்டும் என்பதற்காக ஓட்டங்களை பெறுவதை நிறுத்திக்கொண்டார். எனினும், நான் உடனடியாக மெதிவ்ஸிடம் சென்று, எனக்கு சதம் தேவையில்லை. விரைவாக போட்டியில் வெற்றிபெற, ஓட்டங்களை பெற வெண்டும் என கூறினேன்.

ஆனால், முழு நம்பிக்கையுடன் இருந்த மெதிவ்ஸ் என்னிடம், 10 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றிபெற 2 பந்துகள் போதுமானது எனவும், கடைசி இரண்டு பந்துகள் வரையும் காத்திருக்க தயார் எனவும் கூறியதுடன், என்னை சதத்துக்கு செல்லுமாறும் கூறினார். அவர் கொடுத்த அந்த நம்பிக்கை, என்னை குறித்த தருணத்தில் சதம் பெற வைத்தது” என சந்திமால் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார்

போட்டியின் 48வது ஓவரின் 2வது பந்தில், சந்திமால் லோங் ஓன் பகுதிக்கு சிக்ஸர் ஒன்றை விளாசி தனது சதத்தை பதிவுசெய்து, மதிப்புமிக்க லோர்ட்ஸ் மைதான கௌரவ பட்டியலில் இடம் பிடித்துக்கொண்டார்.

தொடர்ந்து, இலங்கை அணியின் வெற்றிக்கு மூன்று ஓட்டங்கள் தேவைப்பட, அதிரடியாக பௌண்டரி விளாசி இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்தார். சந்திமாலின் இந்த இன்னிங்ஸ், இலங்கை கிரிக்கெட்டின் தரத்தை உலகக் கிரிக்கெட்டுக்கு எடுத்துக்காட்டியிருந்தது சிறப்பம்சமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<