திலான் சமரவீரவின் ஓய்வும், குசலின் இரட்டைச் சதமும்

3907

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விடைகொடுக்கவுள்ள திலான் சமரவீரவுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அதை இரட்டைச் சதமாக மாற்றி அதை திலான் சமரவீரவுக்கு பரிசாக வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் தெரிவித்திருந்தார்.

எனினும், வெலிங்டனில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் மழையின் காரணமாக 13 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்டிருந்த நிலையில், வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.    

இறுதிவரை களத்தில் நின்று போட்டியை சமனிலை செய்த மெண்டிஸ், மெதிவ்ஸ்

வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து …

இந்த நிலையில் நேற்று (18) நடைபெற்ற போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி சார்பில், குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

நேற்றைய நாள் நிறைவில் குசல் மெண்டிஸ் சதம் கடந்து ஆட்டமிழக்காது 116 ஓட்டங்களையும், மெதிவ்ஸ் சதம் கடந்து ஆட்டமிழக்காது 117 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இவ்விருவரும் இணைந்து இணைப்பாட்டமாக 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இந்த ஓட்ட எண்ணிக்கையே இப்போட்டியை சமநிலைப்படுத்துவதற்கு பெரும் துணையாக இருந்தது.

அத்துடன், நான்காவது நாள் முழுவதும் விளையாடிய இந்த ஜோடி, டெஸ்ட் அரங்கில் கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் முழுவதும் ஆட்டமிழக்காது நிலைத்து நின்று விளையாடி வீரர்கள் என்ற புதிய சாதனையும் படைத்தனர்.

இதுஇவ்வாறிருக்க, டெஸ்ட் போட்டிகளில் ஓட்டங்களைக் குவிப்பதில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த குசல் மெண்டிஸ், நேற்று பெற்றுக்கொண்ட சதம் குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நியூசிலாந்து டெஸ்ட் தொடருடன் விடைபெற்றுச் செல்லவுள்ள துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான திலான் சமரவீரவுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், போட்டியின் இறுதி நாளான இன்றைய தினம் (19) இரட்டைச் சதமொன்றை அடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய …

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் திலான் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த சில மாதங்களாக என்னால் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக கடந்த 15 ஒருநாள் போட்டிகளில் என்னால் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போனது. எனினும், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான திலான் சமரவீர ஆகிய இருவரும் என்னை அணியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்பினை தெரிவித்தனர். எனக்கு டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடுவதற்கு அவர்கள் வாய்ப்பு வழங்கினார்கள். அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே நான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

நியூசிலாந்து அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு திலான் சமரவீர அண்ணா இலங்கை அணியிலிருந்து விடைபெற்றுச் செல்லவுள்ளார். எனவே, எனது துடுப்பாட்ட குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்த திலான் சமரவீரவுக்கும், பயிற்சியாளருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கடந்த ஒரு வருட காலமாக பணியாற்றிய திலான் சமரவீர, நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் விடைபெற்றுச் செல்லவுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் டர்ஹம் கிரிக்கெட் கழகத்தின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய ஜோன் லுவிஸ் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அசத்தல் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் மெதிவ்ஸ், மெண்டிஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது….

கடந்த காலங்களில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓட்டங்களைக் குவிப்பதில் தடுமாற்றத்தை சந்தித்து வந்த குசல் மெண்டிஸ், இவ்வருடம் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 23 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரேயொரு அரைச்சதத்தை மாத்திரமே பெற்றுக் கொண்டார். எனினும், இன்று நிறைவுக்கு வந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மீண்டும் தனது போர்மை நிரூபித்துவிட்டார். இதற்கு முக்கிய காரணமாக திலான் சமரவீர இருந்தார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

இதேநேரம், துடுப்பாட்ட நுட்பங்களை கற்றுக் கொள்வதில் திலான் சமரவீரவின் பங்களிப்பு குறித்து குசல் மெண்டிஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”2017ஆம் ஆண்டு முற்பகுதியில் பங்களாதேஷ் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அந்த அணியுடன் காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நான் 196 ஓட்டங்களைப் பெற்று துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தேன். அப்போது திலான் அண்ணா பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இருந்தார். எனது ஆட்டமிழப்பினை அடுத்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது பற்றி உங்களால் பிறகு உணர்ந்து கொள்ள முடியும் என அவர் என்னிடம் தெரிவித்தார். அதைவிட இன்னும் அதிகளவு ஓட்டங்களைக் குவிக்கின்ற திறமை உங்களிடம் உண்டு. இளம் வயதில் இரட்டைச் சதமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் அளவுக்கு திறமை இருப்பதென்பது உங்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்று இருப்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இதன்பிறகு இவ்வருட முற்பகுதியில் பங்களாதேஷுக்கு நாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போதும் நான் இரட்டைச் சதம் பெறும் வாய்ப்பை மறுபடியும் தவறவிட்டேன். இதன்போதும் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலான் அண்ணா கடமையாற்றினார். அந்தப் போட்டியிலும் அவர் இதே வார்த்தைகளை தெரிவித்தார்” என குசல் மெண்டிஸ் குறிப்பிட்டார்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 58

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய ஒரு …

அதேபோன்று, நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் போட்டியின் இறுதி நாளான இன்று இரட்டைச் சதமொன்றைக் குவிப்பது தொடர்பில் குசல் மெண்டிஸ் கருத்து வெளியிட்டார்.

மேலும், இலங்கை அணியிலிருந்து விடைபெற்றுச் செல்லமுன் இத்தொடரில் இரட்டைச் சதமொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என திலான் அண்ணா என்னிடம் தெரிவித்தார். எனது துடுப்பாட்ட தவறுகளை திருத்திக் கொள்ள அவர் இன்று வரை பல வழிகளிலும் உதவி செய்துள்ளார். அதேபோல அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் அவருடைய பங்களிப்பு குறித்து நன்கு அறிவார்கள். எனவே, கிரிக்கெட்டில் மாத்திரம் அல்ல, எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் உதவி செய்துள்ளதாக குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<