சோண்டர்ஸை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தது யாழ். சென். மேரிஸ் கழகம்

Champions Cup 2026

4
Champions Cup 2026

கொழும்பு சோண்டர்ஸ் கழகத்தை 3 -1 என்ற பெனல்டி முறையில் வீழ்த்தி, யாழ்ப்பாணம், நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் கால்பந்து சம்பியன்ஸ் கிண்ணத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட பிரதான கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் வட மாணகாத்திலிருந்து சம்பியனான முதலாவது கழகம் என்ற சாதனையை மரியதாஸ் நிதர்சன் தலைமையிலான சென். மேரிஸ் கழகம் படைத்தது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட சம்பியன்ஸ் கிண்ண நொக் அவுட் கால்பந்தாட்ட இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று (04) இரவு நடைபெற்றது.

போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றிருந்தமையால் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. குறிப்பாக, இரு அணிகளும் தமது கோல்களை போட்டியின் முதல் 5 நிமிடங்களுக்குள் பதிவு செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதில் போட்டியின் 3ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் கழகத்துக்காக டஞ்சுமா கம்பாரியும், 5ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் கழகத்தின் க்ளோவிஸ் ப்ராங்க்கும் கோலடித்தனர்.

இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனல்டி வாய்ப்புகளில் சென். மேரிஸ் கழகம் 3-1 என்ற பெனல்டிகளில் வெற்றி பெற்று சம்பியனானது. நாட்டின் பழமையான மற்றும் பல வெற்றிகளைப் பெற்ற கழகமான கொழும்பு சோண்டர்ஸ் கழகத்தின் சவாலை, யாழ்ப்பாணம் சென். மேரிஸ் கழககத்தின் கோல்காப்பாளர் எஸ். ஆர்னீகன் தனது அபார திறமையால் முறியடித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கழகமாக, நாட்டின் பல முன்னணி அணிகளைப் பின்னுக்குத் தள்ளி யாழ்ப்பாணம் சென். மேரிஸ் கழகம் சாம்பியனாகியமை ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம், 2022 ஆம் ஆண்டிலேயே சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தரம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் முதல் தடவையாக களமிறங்கிய யாழ்ப்பாணம் சென். மேரிஸ் கழகம் 8ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

இதற்கமைய, சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாணம் சென். மேரிஸ் கழகத்துக்கு ஒரு மில்லியன் ரூபாயும், இரண்டாம் இடத்தைப் பெற்ற சோண்டர்ஸ் கழகத்துக்கு 5 இலட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டன.

இலங்கை கால்பந்து சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகளில், பலம் வாய்ந்த ஜாவா லேன் அணியை பெனல்டி முறையில் (5-4) வீழ்த்தி யாழ்ப்பாணம் சென். மேரிஸ் கழகமும், மாவனல்லை செரண்டிப் கழகத்தை 2-0 என வீழ்த்தி சோண்டர்ஸ் கழகமும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.

இம்முறை இத்தொடர் 12 அணிகளின் பங்கேற்புடன் லீக் மற்றும் நொக் அவுட் சுற்று என இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. லீக் சுற்றில் சம்பியனான குருணாகல் பெலிக்கன்ஸ் அணி நொக் அவுட் சுற்றில் இருந்து விலகியதால், அந்த இடத்திற்கு பேருவளை சுப்பர் சன் அணி உள்வாங்கப்பட்டது.

இதன்படி, சுப்பர் லீக் சுற்றில் முதலிடம் பெற்ற பெலிக்கன்ஸ் கழகத்துக்கு 2 மில்லியன் ரூபாயும், இரண்டாம் இடம் பெற்ற ஜாவா லேன் கழகத்துக்கு ஒரு மில்லியன் ரூபாயும் வழங்கப்பட்டன.

இதில் மற்றுமொரு சிறப்பம்சமாக நொக் அவுட் சுற்றில் ஜாவா லேன் மற்றும் பேருவளை சுப்பர் சன் கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற போட்டி இலங்கை கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இதில் பெனல்டி முறையில் 16-15 என்ற கணக்கில் ஜாவா லேன் கழகம் வெற்றி பெற்ற அந்தப் போட்டியில், ஒட்டுமொத்தமாக 35 கோல்கள் (நிர்ணயிக்கப்பட்ட நேரம் உட்பட) பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<