இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வீர்ர்களுக்கான ஐ.சி.சி. ஒழுக்க விதியை மீறியதற்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ மற்றும் இந்திய ஆரம்ப துடுப்பட்ட வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவருக்கும் போட்டித் தொகையிலிருந்து தலா 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதலாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 503 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை நேற்றைய (24) 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் நாளன்று இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ ஆகிய இருவரும் களத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் போது போட்டியின் 17ஆவது ஓவரை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ வீசினார்.
அப்போது 45 ஓட்டங்கள் எடுத்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை அசித்த பெர்னாண்டோ க்ளீன் போல்ட் முறையில் வீழ்த்தினார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அசித்த பெர்னாண்டோ, ஆட்டமிழந்து வெளியேறிய ஜெய்ஸ்வாலை நோக்கி மிகவும் ஆக்ரோஷமாகச் சில வார்த்தைகளைக் கூறி வழியனுப்ப முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், மைதானத்தை விட்டு வெளியேறாமல் உடனடியாகப் பந்துவீச்சாளரை நோக்கித் திரும்பி நேருக்கு நேர் மோதினார்.
- போட்டியின் ஆதிக்கத்தினை முழுமையாக தமாக்கியுள்ள இந்தியா
- படிக்கல் மீண்டும் அபார சதம்; முதல் நாளில் வலுப்பெற்ற இந்தியா
இரு வீரர்களும் மிகவும் நெருக்கமாக வந்து ஒருவரையொருவர் முட்டிக்கொள்ளும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மைதானத்தில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கள நடுவர்கள் உடனடியாகத் தலையிட்டு இரு வீரர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பேசுபொருளாகவும் மாறியது.
இந்த நிலையில், ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் மீது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.12-ன் கீழ், மைதானத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் வீரர்கள் ஒருவரையொருவர் முட்டிக்கொள்வது, தள்ளுவது அல்லது வேண்டுமென்றே உடல் ரீதியாக மோதுவது ஆகியவை குற்றமாகும்.
இதன்படி, ஜெய்ஸ்வால் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்ட இருவருக்குமே ஐசிசி அபராதம் மட்டுமில்லாமல் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கியுள்ளது.
அதேபோல, கடந்த 24 மாதங்களில் இரண்டு வீரர்களும் தங்களது முதல் தகுதி இழப்புப் புள்ளியைப் பெற்றுள்ளார்கள்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<






















