இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்த பிறகு நடந்த சம்பவத்திற்காக, இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
யஷஸ்வி – அசித்தவிற்கு ஐசிசி இனால் அபராதம் விதிப்பு
அந்தவகையில் தற்போது இலங்கை – இந்திய அணிகள் இடையே நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியில் ஐ.சி.சி. இன் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகிய மூன்றாவது வீரராக பிரபாத் ஜயசூரிய மாறியிருக்கின்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமான திங்கட்கிழமை (24) அந்த நாளின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்த பிறகு, உடை மாற்றும் அறைக்குத் திரும்பிச் செல்லும் வழியில் ஜயசூரிய தனது துடுப்புமட்டையால் எல்லைக் கோட்டுப் பகுதியிலிருந்த குஷன்களை அடித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதன் மூலம் “கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள், மைதான உபகரணங்கள் அல்லது பொருத்துதல்களை சேதப்படுத்துதல் அல்லது முறைகேடாகப் பயன்படுத்துதல்” தொடர்பான ஐ.சி.சி இன் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 ஐ பிரபாத் ஜயசூரிய மீறியதாகக் கண்டறியப்பட்டது.
அந்த வகையில் இதற்காக பிரபாத் ஜயசூரிய அவரது ஒழுங்கு நடவடிக்கை பதிவேட்டில் ஒரு நன்னடத்தை விதி மீறல் புள்ளியினை பெற்றிருக்கின்றார்.
இப்போட்டியின் முதல் நாளில் நடந்த மோதல் காரணமாக தண்டனை பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் இதற்கு முன்னர் ஐ.சி.சி. இனால் தண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















