கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி, தீவிர போராட்டத்துடன் பலோவ் ஒன்னை தடுக்க முயன்று வருகின்றது.
>>பிரபாத் ஜயசூரியவின் செயலுக்கு ஐ.சி.சி. இன் ஒழுங்கு நடவடிக்கை
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது, இந்திய அணியின் இமாலய முதல் இன்னிங்ஸை அடுத்து (503/9d) இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்து 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்பட்டிருந்தது.
மூன்றாம் நாளில் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு கமில் மிஷார மற்றும் பசிந்து சூரியபண்டார ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஆனால் பிரசித் கிருஷ்ணாவின் வேகத்தில் எழுந்த ஷோர்ட் பிட்ச் பந்தை எதிர்கொள்ள தடுமாறிய கமில் மிஷார விக்கெட்காப்பாளர் துருவ் ஜூரலிடம் பிடி கொடுத்து வெளியேறினார். பின்னர் சூரியபண்டாரவுடன் இணைந்த கமிந்து மெண்டிஸ், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நிதானமாக ஆடி நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக 87 ஓட்டங்கள் சேர்த்தார்.
பின்னர் மூன்றாம் நாளின் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பு பிரசித் கிருஷ்ணாவின் பந்தை அடித்தாட முயன்ற கமிந்து மெண்டிஸ் அதனை மிட்-விக்கெட் திசையில் ரவீந்திர ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 32 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதிய உணவு இடைவேளையின் பின்னர் தனது கன்னி டெஸ்ட் அரைசதத்தை பசிந்து சூரியபண்டார பூர்த்தி செய்தார். அதன் பின்னர் புதிய வீரராக வந்த அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவின் விக்கெட் 8 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து சொனால் தினுஷவுடன் 34 ஓட்டங்களை இணப்பாட்டமாக சேர்த்த பசிந்து சூரியபண்டாரவின் இன்னிங்ஸ் முடிவடைந்தது. 9 பெளண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் பெற்ற அவர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நிரோஷன் டிக்வெல்ல பின்னர் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை 173/7 என்கிற இக்கட்டான நிலைக்குச் சென்றது. எனினும் 330 இலங்கைக்கு, தினுஷ – கேஷர நுவன்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சுழற்பந்து வீச்சை சாதுரியமாக எதிர்கொண்ட தினுஷ தொடரில் மூன்றாவது 50+ ஓட்டங்களைக் கடந்தார்; இந்த ஜோடி 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றது. நுவன்த 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து மூன்றாவது இடைவெளியிலும் நிதானமாக ஆடிய தினுஷ ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள் எடுத்து அணியின் முக்கிய தூணாக மாறினார். அடுத்து மூன்றாம் நாள் ஆட்டம் 83.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையால் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்து, இன்னும் இந்தியாவை விட 238 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையால் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்ட போது சொனால் தினுஷ ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களுடனும், லஹிரு குமார 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















