LPL தொடரில் விளையாடவுள்ள இர்பான் பத்தான்!

225
Irfan Pathan to play for Kandy Tuskers

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பத்தான், லங்கா ப்ரீமியர் லீக்கின் கண்டி டஸ்கர்ஸ் அணியிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் அணியில் க்ரிஸ் கெயில், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப் மற்றும் லியம் ப்ளங்கட் ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், இந்தப்பட்டியலில் தற்போது இர்பான் பத்தான் இணைந்துள்ளார்.

>> துடுப்பு மட்டையை வீசி எறிந்த கிறிஸ் கெய்லுக்கு நேர்ந்த கதி

லங்கா ப்ரீமியர் லீக்கின் கண்டி டஸ்கர்ஸ் அணியில் இணைந்துள்ளமை குறித்து அறிவித்துள்ள இர்பான் பத்தான், “நான் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். குறிப்பாக கண்டி டஸ்கர்ஸ் அணியில் மிகப் பிரபலமான வீரர்கள் உள்ளனர். எனவே, இந்த அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

கண்டி டஸ்கர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஹசான் திலகரட்ன செயற்படவுள்ளார். இந்தநிலையில், இவர் அணியில் இணையவுள்ள இர்பான் பத்தான் மற்றும் அணியின் உரிமையாளர் சொஹைல் கான் ஆகியோரை வரவேற்றுள்ளார். “இர்பான் பத்தான் அணியில் இணைவது அணிக்கு பலம் மாத்திரமின்றி, அவருடைய அனுபவம் அணிக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும்” என்றார்.

Watch – முன்னணி வீரர்களின் வெளியேறல் LPL ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

அதேநேரம், “இர்பான் பத்தான் உற்சாகமளிக்கக்கூடிய சகலதுறை வீரர். அவர் கண்டி டஸ்கர்ஸ் அணியில் இணையவுள்ளமை ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சியான விடயம்” என இலங்கை கிரிக்கெட்  அணியின் உப தலைவர் மற்றும் லங்கா ப்ரீமியர் லீக் பணிப்பாளர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 21ம் திகதி முதல் டிசம்பர் 13ம் திகதிவரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி-பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<