இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டித் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டதாக ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.
ஐ.பி.எல் தொடருக்கு மேலும் சில நிபந்தனைகள்
இதுதொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் வழங்கியது. அதனைத்தொடர்ந்து ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கான கடிதத்தை ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபைக்கு பிசிசிஐ அனுப்பியது.
இதனிடையே வெளிநாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகங்களின் அனுமதி தேவை. இதில் விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐ.பி.எல் தொடரை நடத்த கொள்கை அளவில் இந்திய அரசு அனுமதி வழங்கியதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமான அனுமதி கிடைத்துள்ளது. இதுகுறித்து ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில்,
”மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் இருந்து முறையான எழுத்துப்பூர்வ அனுமதியை பிசிசிஐ பெற்றுள்ளது.
video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126
மேலும், முன்னதாக வாய்மொழியாக இந்திய அரசு ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கு அனுமதி வழங்கியது. இதனால் நாங்கள் ஐ.பி.எல் தொடரை நடத்துவோம் என ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையிடம் அறிவித்தோம். தற்போது எமக்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளது. ஆகவே, ஐ.பி.எல் அணிகள் எல்லாவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும்” என தெரிவித்தார்.
அத்துடன், பிசிசிஐ வகுத்துள்ள கொவிட் – 19 வைரஸ் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை அனைத்து அணிகளும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறிருக்க, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் ஆகஸ்ட் 21ஆம் திகதி 24 மணி நேரத்திற்குள் இரண்டு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட பிறகு துபாய் புறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 22ஆம் திகதி புறப்படுகிறது.
அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில்
அதற்கு முன்னதாக பிரிஜேஷ் பட்டேல் தலைமையிலான ஐ.பி.எல் நிர்வாகிகள் குழு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் வாரத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்று அங்குள்ள ஏற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.
இதேவேளை, துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை இதுவரை வெளியாகவில்லை.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















