கொஹ்லி சதம், இந்திய அணி சிறந்த நிலையில்

412
Virat Kohli
(AP Photo/Ricardo Mazalan)

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நேற்றுத் தொடங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய  அணியின் தலைவர் விராத் கொஹ்லி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.

இந்தியா ஐந்து துடுப்பாட்ட வீரர்கள், ஐந்து பந்து வீச்சாளர்கள் என்ற அடிப்படையில் விளையாடும் என்று கூறிய விராத் கொஹ்லி, மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றார். மேலும், ஜடேஜாவிற்கு இடமில்லை என்றும், மிஸ்ரா அணியில் இடம்பிடித்துள்ளார் என்றும் கூறினார்.

இரு அணிகளதும் வீரர்கள் விவரம்:

  1. முரளி விஜய், 2. ஷிகர் தவான், 3. புஜாரா, 4. கோலி, 5. ரகானே, 5. சஹா (விக்கெட் கீப்பர்), 6. அஸ்வின், 7. மிஸ்ரா, 9. உமேஷ் யாதவ், 10. இசாந்த் சர்மா, 11. முகமது ஷமி.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள்:

  1. பிராத்வைட், 2. சந்த்ரிகா, 3. டேரன் பிராவோ, 4. சாமுவேல்ஸ், 5. பிளாக்வுட், 6. சேஸ், 7. டவ்ரிச், 8. கார்லோஸ் பிராத்வைட், 9. ஹோல்டர், 10. பிஷூ, 11. கேப்ரியல்.

இதன்படி முரளி விஜயும், ஷிகர் தவானும் இந்தியாவின் இனிங்ஸைத் தொடங்கினர். ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருந்ததால், வேகப்பந்து வீச்சாளர்களால்பவுன்ஸ்செய்ய முடிந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடிஷாட்பிட்ச்தாக்குதலைத் தொடுத்து மிரட்டினர்.

வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் வீசிய 7ஆவது ஓவரில் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் வீழ்ந்தார். எழும்பி வந்த பந்தை விஜய் (7 ஓட்டங்கள், 26 பந்துகள்) தேவையில்லாமல் தடுத்து ஆட முயற்சித்து 2ஆவது ஸ்லிப்பில் நின்ற கிரேக் பிராத்வெய்ட்டிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து புஜாரா ஆட வந்தார். இங்குள்ள ஆடுகளங்களில் நிதானத்தை கடைபிடிப்பது முக்கியம் என்பதை உணர்ந்த ஷிகர் தவானும், புஜாராவும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். குறிப்பாக புஜாரா, நிறையப் பந்துகளை தொடவே இல்லை. அணியும் சரிவில் இருந்து மீண்டது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இனிங்ஸில் 27 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 72 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஷிகர் தவான் 46 ஓட்டங்களோடும் , புஜாரா 14 ஓட்டங்களோடும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டத்தைத் தொடங்கிய உடனே புஜாரா 16 ஓட்டங்களோடு (67 பந்துகள்) ஆட்டம் இழந்தார். அடுத்து தலைவர் விராத் கொஹ்லி  களம்  இறங்கினார். மறுமுனையில் தவான் 3ஆவது அரைச்சதத்தை கடந்தார். 33 ஓவர்கள் முடிந்திருந்த போது இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 94 ஓட்டங்களைச்  சேர்த்து இருந்தது.

தவான் 52 ஓட்டங்களோடும் (84 பந்துகள், 4 பவுண்டரிகள்), விராத் கொஹ்லி 14 ஓட்டங்களோடும் (20 பந்துகள், 2 பவுண்டரிகள்) விளையாடிக் கொண்டிருந்தனர்.

இறுதியில் இந்திய அணி 1ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இந்திய அணி சார்பாக தலைவர் விராத் கொஹ்லி மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 143 ஓட்டங்களையும் ஷீகர் தவான் 82 ஓட்டங்களையும் அதிக பட்ச ஓட்டங்களாகப் பெற்றனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் தேவேந்திர பீஸோ 108 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் சனோன் கேப்ரியல் 43 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் வீழ்த்தி இருந்தனர். போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 302/4
விராத் கொஹ்லி 143*, ஷீகர் தவான் 82, ரவி அஷ்வின் 22*, அஜின்கியா ரஹானே 22
தேவேந்திர பீஸோ 108/3, சனோன் கேப்ரியல் 43/1

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்