உலகக் கிண்ணத்துக்கு ஆப்கான் நேரடி தகுதி; இலங்கைக்கு சிக்கல்!

ICC ODI Super League 2022

3960

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கிண்ணத் தொடருக்கான நேரடி தகுதியை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டு அணிகளுக்கும் தலா 5 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

>> மழையால் தடைப்பட்ட இலங்கையின் எதிர்பார்ப்பு

அதன்படி 115 புள்ளிகளை பெற்றுக்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 7வது இடத்துடன் நேரடி தகுதியை பெற்றுக்கொண்டதுடன், இலங்கை அணி 67 புள்ளிகளுடன் 10வது இடத்தை பிடித்துகொண்டது.

இந்தநிலையில் அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெற்றுக்கொண்ட 7 அணிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன.

>> ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கில் இலங்கைக்கு மேலும் பின்னடைவு!

குறிப்பிட்ட இந்த வரிசையில் மேலும் ஒரு அணிக்கான வாய்ப்புள்ளதுடன், இந்த போட்டியில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் போட்டியிடுகின்றன.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், 88 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இலங்கை அணிக்கு மீதம் 4 போட்டிகள் உள்ளதுடன், தென்னாபிரிக்க அணிக்கு (59 புள்ளிகள்) 6 போட்டிகள் எஞ்சியுள்ளன. எனவே, இந்த அணிகளின் போட்டி முடிவுகளின் அடிப்படையில் ஒரு அணி அடுத்த உலகக்கிண்ணத்துக்கான நேரடி தகுதியை பெற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<