காயம் காரணமாக சிறிது காலம் மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து விலகியிருந்த இலங்கையின் நட்சத்திர மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேயரத்ன, கலிபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியை இரண்டு மணித்தியாலங்கள் 34.22 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், இலங்கை சார்பில் மரதன் ஓட்டப் போட்யொன்றில் வீராங்கனையொருவர் பதிவுசெய்த இரண்டாவது அதிவேக நேரத்தையும் பதிவுசெய்தார். அத்துடன், மரதன் ஓட்டத்தில் ஹிருனியின் இரண்டாவது அதிசிறந்த காலமாகவும் அது பதிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனினும், பெண்களுக்கான மரதனில் இலங்கை சாதனையையும், தெற்காசிய சாதனையையும் முறியடிக்கும் வாய்ப்பை 12 செக்கன்களால் அவர் தவறவிட்டார்.
தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 5 தேசிய சாதனைகள்
அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற ஹிருனி, சுமார் 12 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச மரதன் போட்டியொன்றில் பங்குபற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் ஹிருனி விஜேரத்ன தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அதேபோல, அவர் கடைசியாக 2020இல் நடைபெற்ற உலக மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<