வீர வீராங்கனைகளுக்கு மாதாந்தம் ஊட்டச்சத்து பொதிகள்  

188

இலங்கையில் தொழில்முறை வீரர்களை உருவாக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 60 வீர வீராங்கனைகளுக்கு மாதாந்தம் 25,000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து பொதிகளை வழங்குவதற்கு பொன்டேரா ப்றாண்ட்ஸ் லங்கா நிறுவனம் முன்வந்துள்ளது.

சர்வதேச மட்டத்தில் பதக்கம் வெல்லக்கூடிய தொழில்முறை வீரர்களை உருவாக்கும் நோக்கில் சகல விளையாட்டுக்களையும் உள்ளடக்கியதாக 60 வீர வீராங்கனைகள் விளையாட்டுத்துறை அமைச்சுடன் அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த வீரர்களின் பயிற்சிகளுக்காக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

>>வரலாற்றில் முதல்முறை 60 வீர, வீராங்கனைகள் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒப்பந்தம்

இந்த நிலையில், உயர் ஆற்றல் வெளிப்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்ட 60 வீர வீராங்கனைகளுக்கும் பொன்டேரா ப்றாண்ட்ஸ் லங்கா நிறுவனனத்தின் (அன்கர்) அனுசரணையில் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து பொதிகள் நேற்று (24) உத்தயோகப்பூர்வமாக வழங்கிவைக்கப்பட்டன.

இந்த வைபவம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பொன்டேரா இலங்கை – இந்திய உப கண்டங்களுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் வித்யா சிவராஜா ஆகியோரது தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் தொடர்ந்து பேசிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ”போட்டியாளர்களின் ஆற்றல் வெளிப்பாடுகளின் அடிப்படையிலேயே விளையாட்டுத்துறை அமைச்சு அவர்களை ஒப்பந்தத்தில் இணைத்து மாதாந்தம் கொடுப்பணவு வழங்குகின்றது. அவர்களது ஆற்றல்கள் வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் திறன்காண் போட்டிகள் மூலம் பரீட்சிக்கப்படும்.

ஆற்றல்களில் பின்னடைவு ஏற்படும் போட்டியாளர்கள் நான்கு மாதங்களுக்குள் உரிய மட்டத்தை மீண்டும் அடையவேண்டும். தவறினால் ஒப்பந்தம் குறித்து பரிசீலிக்கப்படும்.

>>சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு

அதேபோல, இந்த வருடம் முதல் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தேசிய குழாம்களில் இடம்பெற்றுள்ள திறமையான 200 வீர, வீராங்கனைகளை தொழில்முறை வீரர்களாக உருவாக்குவதே எமது குறிக்கோளான அமைந்துள்ளது.

அந்த வீரர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு, ஊட்டச்சத்து பொதிகளுக்கு மேலதிகமாக தொழில்முறை வீரர்களாக முன்னேறிச் செல்வதற்கான அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இன்னும் இரண்டு மாதங்களில் கனிஷ்ட வீர வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்டு ஒப்பந்தத்தில் இணைக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 60 வீரர்களுக்கும் ஊட்டச்சத்து பொதிகளை வழங்க பொன்டேரா ப்றாண்ட்ஸ் நிறவனம் முன்வந்தமைக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

>>தேசிய விளையாட்டு பேரவையின் 2021இற்கான பாதீடு மஹேலவினால் சமர்ப்பிப்பு

இதன்படி மெய்வல்லுனர், குத்துச்சண்டை, பளுதூக்கல், நீச்சல், ஜுடோ, பெட்மிண்டன், விசேட தேவைகள் கொண்ட பரா வீரர்கள் உள்ளிட்ட 7 விளையாட்டுக்களைச் சேர்ந்த 60 வீர வீராங்கனைகளுக்கு  ஊட்டச்சத்து பொதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டன் முதலாவது இலக்கு அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாக்களில் இலங்கை வீரர்கள் பதக்கங்களை வெல்வதாகும்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க