இலங்கை வரும் இங்கிலாந்து ஒருநாள் குழாம் அறிவிப்பு

2085
Image Courtesy - Getty Images

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடு பிடித்துள்ள மொயின் அலியின் ஒசாமா விவகாரம்

அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை ஒசாமா…

இதில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இழிவை ஏற்படுத்தியதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் தண்டனை விதிக்கப்பட்ட பென் ஸ்டொக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் இங்கிலாந்து குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த, 2017இல் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள இரவு விடுதிக்கு வெளியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்திற்காக இந்த இருவரும் வரும் டிசம்பரில் ஒழுக்காற்று விசாரணைக்கு முகம்கொடுக்கவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் இடம்பெற்ற ஏழு நாள் வழக்கு விசாரணையில் 27 வயதுடைய ஸ்டொக்ஸ் சண்டையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு, இந்த கைகலப்பின்போது அவருடன் இருந்த 29 வயது சக வீரர் ஹேல்ஸ் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.

வேகமாக பந்து வீசக்கூடிய 24 வயதுடைய ஒலி ஸ்டோன் இங்கிலாந்து குழத்தில் முதல் முறை இடம்பிடித்துள்ளார். யொக்ஷயர் வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கட்டின் இடைவெளியை நிரப்பவே அவர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது 33 வயதையுடைய பிளங்கட் தனது திருமணம் காரணமாக இலங்கை சுற்றுப்பயணத்தின் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

உள்ளூர் போட்டிகளில் அபார திறமையை வெளிக்காட்டிய ஸ்டோன், கௌன்டி சம்பியன்சிப் போட்டிகளில் 11.61 பந்துவீச்சு சராசரியுடன் 34 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சு வேகம் இங்கிலாந்து தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் விடயமாக உள்ளது. அவர் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசக்கூடியவராவார்.

இந்தியாவுக்கு எதிரான அண்மைய டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கர்ரன்  தனது சகோதரர் டொம் கர்ரன் உடன் அணியில் இடம்பிடித்துள்ளார். சகலதுறை வீரரான சாம் கடந்த ஜுன் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் சர்வதேச போட்டியில் மாத்திரம் ஆடியுள்ளார்.  

இந்த சகோதரர்கள் ஒன்றாக ஆடும் பட்சத்தில் இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து அணியில் ஆடும் முதல் சகோதரர்களாக வரலாறு படைப்பார்கள்.  

இதுவரை இங்கிலாந்து அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் மற்றொருவரான லியாம் டோசன் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் நிரந்த சுழற்பந்து வீச்சாளர்களாக மொயீன் அலி மற்றும் ஆதில் ரஷித் விளையாடி வருகின்றனர்.   

உபாதைக்கு உள்ளாகி இருக்கும் டேவிட் வில்லி இங்கிலாந்து குழாத்தில் இடம்பெறாத குறிப்பிடத்தக்க வீரராக உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இலகு வெற்றி

ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது மோதலாக…

இங்கிலாந்து அணி வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள், ஒரு டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகும்.  

ஆசிய கிண்ண போட்டியின் முதல் இரு ஆட்டங்களிலும் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இலங்கை அணி தனது சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் திறமையை வெளிக்காட்ட எதிர்பார்த்துள்ளது.   

இங்லாந்து குழாம்

இயன் மோர்கன் (தலைவர்), மொயீன் அலி, ஜொன்னி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், டொம் கர்ரன், லியாம் டோசன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட் (கடைசி இரண்டு போட்டிகளுக்கும்), ஆதில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டொக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<