பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இலகு வெற்றி

177
India v Pakistan - Asia Cup

ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது மோதலாக இடம்பெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில், இந்திய அணி இலகுவான முறையில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வரும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியபாகிஸ்தான் அணிகள் இடையிலான இந்தப் போட்டி துபாய் மைதானத்தில் புதன்கிழமை (19) ஆரம்பமாகியிருந்தது.

ஹொங்கொங் அணியின் சவாலிலிருந்து தப்பித்த இந்தியா

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் நான்காவது..

பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் ஆசியக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே தெரிவாகிய நிலையில் குழு A அணிகளில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெறுவது யார் ? என்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆரம்பமாகியிருந்த இப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

இதனை அடுத்து செவ்வாய்க்கிழமை (18) ஹொங்கொங் அணியுடன் இடம்பெற்ற குழு A இன் இரண்டாவது லீக் போட்டியில் சற்று சரிவினை சந்தித்திருந்த இந்திய அணி, அவர்களது சிறப்பு வீரர்களான ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரினை அணிக்கு அழைத்து களத்தடுப்பில் ஈடுபட தயாரானது.

களத்தடுப்பில் ஈடுபடும் இந்திய அணியின் பந்துவீச்சை நல்ல முறையில் முகம் கொடுத்து சவாலான வெற்றி இலக்கு ஒன்றினை நிர்ணயிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் அணியினர் தமது துடுப்பாட்டத்தை தொடங்கினர். எனினும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவ்னேஸ்வர் குமார் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான இமாம்உல்ஹக் மற்றும் பக்கார் சமான் ஆகியோரின் விக்கெட்டுக்களை சாய்த்து ஆரம்பத்திலேயே தடுமாற்றம் ஒன்றினை உருவாக்கினார்.

இதன்படி, தொடக்கத்திலேயே 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் அணியினை, புதிய துடுப்பாட்ட வீரர்களாக வந்த பாபர் அசாம் மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டு வீரர்களினதும் முயற்சி வெற்றி அளித்த தருணத்தில் பாகிஸ்தான் அணியின் மூன்றாவது விக்கெட் அவ்வணி 85 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் பறிபோனது. திறமையான முறையில் ஆடிக்கொண்டிருந்த பாபர் அசாம் யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் வீழ்ந்து 47 ஓட்டங்களுடன் அரைச்சதம் தாண்டாத நிலையில் ஓய்வறை நடந்தார்.

இதனை அடுத்து புதிய வீரராக வந்த பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட்டும் ஜொலிக்கவில்லை. சர்பராஸ் ஒருபுறமிக்க நம்பிக்கை அளித்த அனுபவம் கொண்ட சொஹைப் மலிக்கின் விக்கெட்டும் 43 ஓட்டங்களுடன் வீழ்ந்தது.

மலிக்கின் விக்கெட்டினை தொடர்ந்து 100 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து மீண்டும் தடுமாறத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு மத்திய வரிசை வீரர்களில் ஒருவர் கூட நம்பிக்கை தராத நிலையில் அவ்வணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பாகிஸ்தானை அபரிமிதமான முறையில் கட்டுக்குள் கொண்டு வந்த இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக புவ்னேஸ்வர் குமார், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும் ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

மன்னிப்புக் கேட்டார் மெதிவ்ஸ்

ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்வி முழு அணிக்கும்…

இதன் பின்னர் இலகு வெற்றி இலக்கான 163 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா, அணித்தலைவர் ரோஹித் சர்மா, சிக்கர் தவான் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக அதிரடியான அரைச்சதம் ஒன்றுடன் 52 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம், சிக்கர் தவான் 46 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தினேஷ் கார்த்திக் (31) மற்றும் அம்பதி ராயுடு (31) ஆகியோரும் இந்திய அணியின் வெற்றியில் தமது சிறு துடுப்பாட்ட உதவியை வழங்கியிருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக இந்திய அணியில் பறிபோன இரண்டு விக்கெட்டுக்களையும் ஆளுக்கு ஒவ்வொன்றாக பாஹிம் அஷ்ரப் மற்றும் சதாப் கான் ஆகியோர் கைப்பற்றினர்.

இந்திய அணி இப் போட்டி வெற்றியுடன் ஆசியக் கிண்ணத்திற்கான குழு A அணிகளின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தினைப் பெற்றுக் கொள்கின்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக புவ்னேஸ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 162 (43.1) பாபர் அசாம் 47(62), சொஹைப் மலிக் 43(67), புவ்னேஸ்வர் குமார் 15/3(7), கேதர் ஜாதவ் 23/3(9), ஜஸ்பிரிட் பும்ரா 23/2 (7.1)

இந்தியா – 164/2 (29) ரோஹித் சர்மா 52(39), சிக்கர் தவான் 46(54), தினேஷ் கார்த்திக் 31(37)*, சதாப் கான் 6/1(1.3)

முடிவுஇந்திய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<