ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ல்க்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (19) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷாப் பந்த் தலைமையிலான லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் வாய்ப்பையும் இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், இப்போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா இருவரும் களத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில், திக்வேஷ் ரதியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது திக்வேஷ் ரதி விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக தனது வழக்கமான கையொப்பமிடும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த அபிஷேக் சர்மா கடுமையான வார்த்தைகளைக் கூற, இருவருக்கும் இடையே வார்த்தை மோதலானது ஏற்பட்டது. அதன்பின் கள நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரும் சேர்ந்த அவர்களை சமாதனப்படுத்தினர். இருப்பினும், இவர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
- RCB அணியில் இணையும் ஜிம்பாப்வே வேக நட்சத்திரம்
- மும்பை இந்தியன்ஸ் அணியில் சரித் அசலங்க!
- பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற குஜராத், பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள்
இந்நிலையில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக திக்வேஷ் ரதி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திக்வேஷ் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகித அபராதமும், ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 5 தகுதியிழப்பு புள்ளிகள் பெற்றதால், அடுத்து நடைபெறும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். அதேபோல, அபிஷேக் சர்மாவின் போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். ‘இந்த சீசனில் பிரிவு 2.5 இன் கீழ் திக்வேஷ் ரதி செய்த மூன்றாவது குற்றம் இதுவாகும். எனவே, அவர் ஏற்கனவே பெற்ற மூன்று தகுதியிழப்புப் புள்ளிகளுடன் கூடுதலாக இரண்டு தகுதியிழப்புப் புள்ளிகளைப் பெற்றார். இதன்மூலம் இந்த சீசனில் அவருக்கு மொத்தம் ஐந்து தகுதியிழப்புப் புள்ளிகள் உள்ளன. இதன் காரணமாக அவர் ஒரு போட்டிக்கு இடைநீக்கம் செய்யப்பட செய்யப்பட்டுள்ளார்.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடும் அடுத்த போட்டியில் திக்வேஷ் ரதி விளையாட மாட்டார். அதேசமயம் அபிஷேக் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் செய்யும் முதல் குற்றம் இதுவாகும். இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்ச அபராதமான 25 சதவீதம் மற்றும் ஒரு தகுதியிழப்புப் புள்ளி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<