கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பெரும் சமர்கள்!

72

இலங்கையில் பரவிவரும் கொரோனா வைரஸின் (COVID-19) தாக்கம் காரணமாக வருடாந்தம் மார்ச் மாதங்களில் நடைபெறும் பாடசாலை கிரிக்கெட் பெரும் சமர் போட்டிகள் பல ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மலைநாட்டில் கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் கண்டி புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான 103வது மலை நாட்டின் நீல நிறங்களின் சமர் திகதிகள் எதுவும் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நீல நிறங்களின் சமரில் கிண்ணத்தை கைப்பற்றப்போவது யார்?

இலங்கை பாடசாலை கிரிக்கெட் பெரும் சமர்களில் முக்கியத்துவம்…..

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் எதிர்வரும் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் நடைபெறவிருந்த 103வது மலை நாட்டின் நீல நிறங்களின் சமர், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். 

அதேநேரம், 70வது தடவையாக நடைபெறவிருந்த மொரட்டுவ ப்ரின்ஸ் ஓஃப் வேல்ஸ் மற்றும் புனித செபஸ்தியன் கல்லூரிகளுக்கு இடையிலான பொன் அணிகளின் சமர் மற்றும் 35வது ஒருநாள் மோதலும் திகதிகள் அறிவிக்கப்படமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பொன் அணிகளுக்கான 70வது பெரும் சமர் எதிர்வரும் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் கொழும்பு நாலந்தா கல்லூரி அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவிருந்த 46ஆவது வருடாந்த ஒருநாள் பெரும் போட்டியும் திகதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 91ஆவது பலுப்பு நிரங்களின் சமர் கடந்த வார இறுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அதேநேரம், இலங்கையில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் 20ம் திகதிவரை மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இந்த போட்டிகள் தொடர்பான மேலதிக ஆயத்தங்கள் வெளியாகும் பட்சத்தில், குறித்த விடயத்தை எமது ThePapare.com மூலமாக அறிந்துக்கொள்ள முடியும். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<