ஆரம்பித்த சில நிமிடங்களில் கைவிடப்பட்ட ஆர்ஜன்டீனா – பிரேசில் போட்டி

FIFA World Cup 2022

1080

பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா அணிகளுக்கு இடையிலான, பிஃபா உலகக்கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரின் போட்டி, கொவிட்-19 விதிமுறை மீறல் காரணமாக கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா அணிகளுக்கு இடையில் நேற்று (5) நடைபெறவிருந்த இந்தப் போட்டி, ஆரம்பமாகிய ஐந்து நிமிடங்களில், பிரேசிலின் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்தியுள்ளனர்.

தேசிய அணியுடன் இணைந்த ரூமி, தேவசகாயம்

குறிப்பாக, ஆர்ஜன்டீன அணியின் மூன்று வீரர்கள், பிரேசிலின் கொவிட்-19 விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அதிகாரிகள் மைதானத்தில் நுழைந்து போட்டியை நிறுத்தியுள்ளனர். மேற்குறித்த மூன்று வீரர்களுடன், மொத்தமாக 4 வீரர்கள், இங்கிலாந்திலிருந்து, பிரேசிலுக்கு வருகைத்தந்துள்ளனர்.

எனவே, இங்கிலாந்தில் இருந்து வருகைத்தரும் வீரர்கள், கட்டாய தனிமைப்படுத்லை மேற்கொள்ளவேண்டும் என பிரேசில் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், மேற்குறித்த வீரர்கள், இங்கிலாந்திலிருந்து வருகைத்தந்ததை மறைத்து, போட்டியில் விளையாடுவதற்கு தயாராகியதாக குற்றச்சாட்டப்பட்டது.

குறித்த வீரர்களின் பெயர்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத போதும், இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் விளையாடிவரும், எமிலியானோ பியூண்டியா, எமிலியானோ மார்டினஸ், ஜியோவானி லோ செல்ஸோ மற்றும் கிரிஸ்டியன் ரெமேரியோ ஆகியோர் இவ்வாறு விதிமிறையை மீறியிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், கைவிடப்பட்ட இந்தப்போட்டி மீண்டும் எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், ஆர்ஜன்டீன அணி, தங்களுடைய அடுத்த தகுதிகாண் போட்டியில், எதிர்வரும் 10ம் திகதி பொலிவியா அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க…