2022 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் பேர்மிங்ஹமில்

714

எதிர்வரும் 2022ஆம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் நகரில் நடைபெறவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர் லூயிஸ் மார்ட்டின் நேற்று (21) வெளியிட்டார்.

ஆபிரிக்க கண்டத்தில் முதற்தடவையாக நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை 2022ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு விண்ணப்பித்திருந்தது. எனினும், பொருளாதார நெருக்கடி, டர்பன் நகரில் உரிய வசதிகள் இல்லாமை மற்றும் போதியளவு அனுசரணையாளர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் அப்போட்டிகளை நடத்துவதிலிருந்து விலகிக் கொள்வதாக தென்னாபிரிக்காவின் விளையாட்டுத்துறை அமைச்சு, பொதுநலவாய நாடுகள் விளையாட்டு போட்டிகளின் அமைப்புக்கு அறிவித்தது.

ஊக்கமருந்து சர்ச்சையினால் ரஷ்யாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை

ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான நகர் வல ஓட்ட சம்பியன்ஷிப்… தடகள மன்னன், ஓய்வுபெற்ற…

 2022 பொதுநலவாய நாடுகளின் போட்டிகளை நடத்துவதற்கு முதலில் கனடாவின் எட்மொன்டன் மற்றும் தென்னாபிரிக்காவின் டர்பன் ஆகிய நகரங்கள் விண்ணப்பித்திருந்தன. எனினும், கனடா தாம் போட்டிகளை நடத்துவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது. இதனால் தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் அப்போட்டிகளை எந்தவொரு தடையுமின்றி நடத்துவதற்கான வாய்ப்பு கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எனினும் அதனை நடத்துவதற்கான உரிய வேலைத்திட்டங்களை சமர்பிக்க தென்னாபிரிக்காவுக்கு பொதுநலவாய நாடுகளினால் வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், தென்னாபிரிக்கா தாமாகவே முன்வந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, குறித்த போட்டிகளை நடத்துவதற்கு பிரித்தானியாவின் லிவர்பூல் மற்றும் பேர்மிங்ஹம் ஆகிய நகரங்கள் விண்ணப்பித்திருந்தன. இரு நகரங்களும் ஒரே நாட்டைச் சார்ந்ததால் இறுதியில் பேர்மிங்ஹமில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேற்கொண்டு எந்த நகரமும் விருப்பம் கோராததால் பேர்மிங்ஹமின் வெற்றி உறுதியானது. இருந்தாலும் இதற்காக செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.  

அதன்பின், விண்ணப்பங்களில் சில குறைபாடுள் இருந்ததால் நவம்பர் மாதம் இறுதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. நவம்பர் மாதம் முடிந்தவுடன் இது குறித்து அறிவித்திருக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து அரசு மற்றும் பேர்மிங்ஹம் நகரம் என்பன உறுதியளிக்காததால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தாமதமானது.

2016/17 லா லிகா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி

இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து.. மெஸ்ஸி ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளார்…

 இந்நிலையில், பொதுநலவாய நாடுகள் போட்டிகள் அமைப்பின் தலைவர் லூயிஸ் மார்ட்டின், பேர்மிங்ஹமில் 2022ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என உத்தியோபூர்வமாக அறிவித்தார்.

இதன்படி, குறித்த போட்டித் தொடரை நடத்துவதற்கு சுமார் 750 மில்லியன் யூரோ தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளதுடன், இதில் 560 மில்லியன் யூரோக்களை இங்கிலாந்து அரசு வழங்குவதற்கு இணங்கியுள்ளது. எஞ்சிய தொகையை உள்ளூர் அமைப்புக்கள் மற்றும் விளம்பரதாரர்கள் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மிகப் பெரிய செலவிலான விளையாட்டு விழாவொன்றை இங்கிலாந்து நடத்தவுள்ளது.

அத்துடன், 2002ஆம் ஆண்டு முதல் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் முக்கிய இடத்தைப் பெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. குறித்த போட்டியை நடத்துவதற்கான மைதானம், பேர்மிங்ஹம்மிலிருந்து 150 மைல் தூரத்தில் இருப்பதால் அந்த விளையாட்டை நடத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டது.  

எனினும், அண்மைக்காலமாக பரவலாகப் பேசப்பட்டு வந்த கிரிக்கெட் போட்டிகள் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி, 2022 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு T-20 கிரிக்கெட் போட்டிகளை (ஆண், பெண்) இணைத்துக் கொள்வதற்கு இதன்போது ஏற்பாட்டுக் குழுவினால் யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இதுதொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டாலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான T-20 கிரிக்கெட் தொடர்களை நடத்துவது தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.  

அதேநேரம், ஜுடோ, மேசைப்பந்து, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக், சைக்கிளோட்டம், டைவிங் மற்றும் 3V3 கூடைப்பந்து உள்ளிட்ட 10 போட்டிகளை இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரத்தைப் பெற்று அடுத்த வருட இறுதியில் இதனை அறிவிக்கவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

தேசிய வலைப்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக திலகா ஜினதாச

இலங்கையை சர்வதேச மட்டத்தில் இரண்டு வகைப் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருக்கும்…

 முன்னதாக 2014இல் ஸ்கொட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலும், 2002இல் மென்செஸ்டரிலும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா நடைபெற்றிருந்ததுடன் 1934இல் லண்டன், 1958இல் கார்டிப், 1970 மற்றும் 1986இல் எடின்பேர்ங் ஆகிய நகரங்களிலும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, 21ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மூன்றாவது பொதுநலவாய விளையாட்டு விழா இதுவாகும்.  

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்து சுதந்திரமடைந்த சுமார் 50இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இவ்விளையாட்டு விழாவானது உலகின் 2ஆவது ஒலிம்பிக் போட்டிகள் என வர்ணிக்கப்படுகின்றது.

அத்துடன் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இவ்விளையாட்டு விழாவின் அடுத்த அத்தியாயம் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்ற நகரம் தொடர்பிலான உத்தியோகபூர்வமான அறிவிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளது. இதில் மலேஷியாவின் கோலாலம்பூர் நகரம் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.