முதல் போட்டியின் தோல்விக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்

173
Image Courtesy - AFP

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் இன்று (05) நடைபெற்ற T-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. எனவே, முத்தரப்பு T-20 தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்த பாகிஸ்தன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

பல்வேறு சாதனைகளுக்கு காரணமாகியிருக்கும் பின்ச்சின் அதிரடி சதம்

ஜிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு T-20 தொடர் ஜிம்பாப்வேயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணி, 55 பந்துகள் மீதமிருக்க ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. T-20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்த தோல்வியானது அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்து, T-20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள அணி என்பதை நிரூபிக்கும் கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியிருந்தது. ஜிம்பாப்வே அணிக்கெதிரான T-20 போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்குப் பதிலாக 19 வயதான இளம் வீரர் சஹீன் அப்ரிடி அணிக்குள் உள்வாங்கப்பட, அவுஸ்திரேலிய அணி மாற்றங்கள் இன்றி களமிறங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது.

இதன் அடிப்படையில், களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்பம் கூறும் அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. போட்டியின் இரண்டாவது ஓவரில் ஹரிஸ் சொஹைல் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த பர்க்கர் ஷமான் மற்றும் ஹுசைன் டலாட் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர்.

இலங்கை பதினொருவர் அணியின் தலைவராக மெதிவ்ஸ்

சுற்றுலா தென்னாபிரிக்கா…

எனினும், போட்டியின் 9ஆவது ஓவரில் ஹுசைன் டலாட் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து வெளியேற, அடுத்து களம் நுழைந்த அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் 14 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பர்க்கர் ஷமான் ஸ்டொய்னிஸின் பந்து வீச்சில் மெக்ஸ்வெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

பர்க்கர் ஷமான் 42 பந்துகளுக்கு முகங்கொடுத்து 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். தொடர்ந்து களமிங்கிய துடுப்பாட்ட வீரர்கள் வேகமான ஓட்டக் குவிப்பில் ஈடுபட, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

இதில் சொஹைப் மலிக் 15 பந்துகளுக்கு 27 ஓட்டங்களையும், அஷிப் அலி 18 பந்துகளில் 37 ஓட்டங்களையும் விளாச, சதாப் கான் 3 பந்துகளுக்கு 7 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய என்ரு டை 4 ஓவர்கள் பந்து வீசி, 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜெய் ரிச்சட்சன் 43 ஓட்டங்களை வாரிக்கொடுத்து 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.

கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச்சின் ஆட்டமிழப்பு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது என்றால் அது மிகையாகது. ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் 172 ஓட்டங்களை விளாசி சாதனை படைத்திருந்த பின்ச்சை, பாகிஸ்தான் அணியின் சஹீன் அப்ரிடி போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். ஆரோன் பின்ச் 11 பந்துகளை எதிர்கொண்டு 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் துரத்தும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் உதவியின்மை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டினை பறிகொடுக்க, மத்திய வரிசை வீரர்களும் பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.  

நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஆர்சி ஷோர்ட் அதிக பந்துகளை எதிர்கொண்ட போதிலும் ஓட்டங்களை பெற்றுக்கொள்ள தவறினார். இவர் 34 பந்துகளுக்கு 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து மீண்டும் ஏமாற்றமளித்த டிராவிஷ் ஹெட் 7 ஓட்டங்கள், மெக்ஸ்வேல் 10 ஓட்டங்கள், மெட்டின்சன் 5 ஓட்டங்கள் ஸ்டொய்னிஸ் 16 ஓட்டங்கள் என தொடர்ச்சியாக அரங்கிற்கு நடையைக் கட்டினர்.

எனினும், அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சற்று வலிமை கொடுத்த அலெக்ஸ் கெரி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும், அவுஸ்திரேலிய அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.  

பாகிஸ்தான் அணி சார்பில் தனது வேகத்தால் மிரட்டிய இளம் சஹீன் அப்ரிடி நான்கு ஓவர்கள் பந்து வீசி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஏனைய பந்து வீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

கோஹ்லியின் சாதனை, ராஹுலின் சதத்துடன் இந்தியாவிற்கு இலகு வெற்றி

இதனால், இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் T-20 தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பிருந்த போதும், அந்த வாய்ப்பினை அவுஸ்திரேலிய அணி தவறவிட்டது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும் முத்தரப்பு தொடருக்கான இறுதிப் போட்டியின் வாய்ப்பை 8 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி தக்கவைத்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதவுள்ள அடுத்த T-20 போட்டியில் தோல்வியடைந்து, இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டு T-20 போட்டிகளிலும் வெற்றி பெறுமாயின் அவுஸ்திரேலிய அணி ஐசிசி T-20 தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்படும். இதன்மூலம்  இந்திய அணி ஐசிசி T-20 தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.  

அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான அடுத்த T-20 போட்டி நாளை (06) ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது பர்க்கர் ஷமானுக்கு வழங்கப்பட்டது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<