தேசிய விளையாட்டு விழாவில் 2ஆவது முறையாகவும் அனித்தா தேசிய சாதனை

846
Anitha

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 43ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை மாத்தறை, கொடவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின.

மீண்டும் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார் அனித்தா

அவர் குறித்த போட்டியில் 3.47 மீற்றர் உயரம் தாவி, இம்முறை…

போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்து, இவ்வருடத்தில் தொடர்ச்சியாக 4ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.

போட்டிகளின் ஆரம்பத்தில் 3.42 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து 2016ஆம் ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட (3.41 மீற்றர்) போட்டிச் சாதனையை முறியடித்த அனித்தா, 2ஆவது முயற்சியாக 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய படைத்தார். எனினும் 3.50 மீற்றருக்காக அவர் மேற்கொண்ட முயற்சி மைதானத்தில் தீடீரென பெய்த மழையால் தடைப்பட்டது.

ஏனினும், மைதானத்தைச் சுற்றி பெய்த மழை முற்றுமுழுதாக ஓய முன்னரே அனித்தாவின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டிகளை ஆரம்பிக்க நடுவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும், புற்தரையைக் கொண்ட மைதானத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வழுக்கும் தன்மை காரணமாக ஆசிய போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அடைவுமட்டமாக அமைந்த 3.50 மீற்றருக்காக அவரால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இதன்படி, கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடமும் போட்டிகளின் முதல் நாளில் தேசிய சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன், 3.46 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய சாதனை படைத்தார்.

அத்துடன், இவ்வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளில் 3.47 மீற்றர் உயரம் தாவி புதிய தேசிய சாதனை படைத்த அவர், ஒரு வருட காலப்பகுதியில் அதே சாதனையை 4ஆவது தடவையாகவும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து கோலூன்றிப் பாய்தலுக்கான முன்னணி பயிற்றுனர்  சுபாஸ்கரனின் பயிற்றுவிப்பின் கீழ் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அனித்தா, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று தேசிய சாதனை படைத்த பிறகு ThePapare.com  இணையளத்தளத்துக்கு அனீதா வழங்கிய விசேட செவ்வியில், தேசிய சாதனையை 2 வருட காலப்பகுதியில் மீண்டும் புதுப்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்ற எனது பயிற்சியாளர் பாஸ்கரன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இந்நிலையில், 3.50 மீற்றருக்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அனித்தா பதிலளிக்கையில், நான் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய சாதனை படைத்தவுடன், திடீரென மழை பெய்தது. இதனால் கொஞ்சம் மனதளவில் சோர்ந்து போனேன். ஆனால் அடுத்த மழை வருவதற்கு முன்னால் எப்படியாவது 3.50 மீற்றர் உயரத்தைத் தாவி ஆசிய போட்டிகளுக்கான அடைவு மட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு எடுத்த முயற்சி நிறைவேறவில்லை.

எனவே இவ்வருடத்துக்கான அனைத்து தேசிய மட்டப் போட்டிகளும் நிறைவுக்கு வந்துள்ள காரணத்தால் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தகுதிபெறுவதற்கான பயிற்சிகளை தற்போது முதல் நான் முன்னெடுத்துள்ளேன். எனவே 3.50 மீற்றராக உள்ள ஆசிய அடைவு மட்டத்தை விரைவில் எட்டுவதற்கு எண்ணியுள்ளேன். அதற்கான எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள போட்டித் தொடர்களில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” எனவும் அவர் தெரிவித்தார்.  

தேசிய விளையாட்டு பெருவிழாவில் 200 வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர்கள்

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து …

இதேவேளை இப்போட்டியில், கிழக்கு மகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட .. கருணாவன்ச, 3.10 மீற்றர் உயரம் தாவி 2ஆவது இடத்தையும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த கே.எஸ். பேரேரா 3.00 மீற்றர் உயரம் தாவி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் கலந்துகொண்டதுடன், அதில் சீ. ஹெரீனா 5ஆவது இடத்தையும், வி. சத்விகா 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  

 மேலும் பல செய்திகளைப் படிக்க