சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்க எதிர்பார்க்கும் மெதிவ்ஸ்

Angelo Mathews retirement

335

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய அனுபவ வீரருமான அஞ்செலோ மெதிவ்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது தொடர்பில் சிந்தித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் சபையிடம் அறிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அஞ்செலோ மெதிவஸ் சிந்தித்துவருவதுடன், இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கலந்துரையாடி, எதிர்வரும் வாரங்களில் முடிவினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்

நட்சத்திர சகலதுறை வீரரான அஞ்செலோ மெதிவஸ், ஒருநாள் தொடர்களுக்கான குழாத்திலிருந்து, தொடர்ச்சியாக நீக்கப்பட்டு வருகின்றமை விமர்சனமாக எழுந்திருக்கிறது. குறிப்பாக, கடைசியாக இவர் விளையாடிய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், ஆட்ட நாயகன் விருது ஒன்றினை வென்றிருந்தார்.

அதேநேரம், 2019ம் ஆண்டு நிறைவுபெற்ற உலகக் கிண்ணத்தில் வேகமாக ஓட்டங்களை குவிக்காவிட்டாலும், அவருடைய சராசரி சிறப்பாக அமைந்திருந்தது. 2018 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இவரது ஓட்ட சராசரி 50 இற்கும் அதிகமாக இருந்தது. எனினும், இவருடைய உடற்தகுதி கேள்விக்குறியாக இருந்தது.

எவ்வாறாயினும், உடற்தகுதியுடன் மீண்டும் அணிக்குள் நுழைந்து சிறப்பாக விளையாடியிருந்தார். அத்துடன், களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சிலும் அபாரமாக செயற்பட்டிருந்தார். இதன் பின்னர், இவர் நீக்கப்பட்டமை கேள்வியை எழுப்பியிருந்தது.

இந்தநிலையில், அண்மையில் கேள்வியை ஏற்படுத்திவரும் வருடாந்த வீரர்களுக்கான ஒப்பந்தத்தில், முன்னணி வீரர்களுடன், அஞ்செலோ மெதிவ்ஸும் கையெழுத்திடாமல் இருந்தார். எனினும், தற்போது தொடர்களுக்கான ஒப்பந்தத்தை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், இங்கிலாந்து தொடர் முடிவடைந்து இலங்கைக்கு வருகைத்தந்த 25 வீரர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…