துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற மகளிர் டி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி 8-வது முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் கடந்த 2024 இறுதிப் போட்டியில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டதுடன், ஆசிய கிரிக்கெட்டில் தங்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான ஓட்ட எண்ணிக்கையை எட்டியது. இதன்படி, முதல் விக்கெட்டுக்கு 129 ஓட்டங்கள் குவித்து அசத்தியதுடன், இருவருமே அரைச் சதம் கடந்து அசத்தினர். இந்த ஜோடி முறையே 59 மற்றும் 68 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கியவர்களில் அணித்தலைவி ஹர்மன்பிரீத் கௌர் 14 ஓட்டங்களையும், ரிச்சா கோஷ் 17 எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன்படி, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை மகளிர் அணி சார்பில் மிதாலி அயோத்யா, சமரி அத்தபத்து மற்றும் சமுதி ப்ரபோதா தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
- சேத்தனா, மிதாலி, சமரியின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி
- சமரியின் சாதனை பந்துவீச்சினால் இலங்கைக்கு மகளிருக்கு 2ஆவது வெற்றி
- ஹர்ஷிதாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் வெற்றி
- பாகிஸ்தானை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை
இதனையடுத்து 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் கொடுத்த இமேஷா துலானி 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுபுறத்தில் அணித்தலைவி சமரி அத்தபத்து நிதானமாக ஆடி 32 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஷ்மி குணரத்ன 22 பந்துகளில் 20 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா 16 பந்துகளில் 22 ஓட்டங்ளையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்கள் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, இலங்கை அணி இறுதியில் 20 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 20 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களையும், தீப்தி சர்மா 4 ஓவர்களில் 19 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றினார். பிரேமா ராவத் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்குக் கைகொடுத்தனர்.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 8ஆவது முறையாக ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இதற்கு முன், 2004, 2005-06, 2006, 2008, 2012, 2016, 2022 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகனை இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கiனை ஷஃபாலி வர்மா தனதாக்கினார்.
போட்டியின் சுருக்கம்
இந்திய மகளிர் அணி – 183/5 (20) ஷஃபாலி வர்மா 68, ஸ்மிருதி மந்தனா 59, மிதாலி அயோத்தி 1/33
இலங்கை – 111 (20) சமரி அத்தபத்து 36, நிலக்ஷிகா சில்வா 22, விஷ்மி குணரத்ன 20, ஸ்ரீ சரணி 4/20, தீப்தி ஷர்மா 3/19
முடிவு – இந்தியா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















