நேற்று (28) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 15ஆவது போட்டியில் கொழும்பு கேப்ஸ் அணியினை ஜப்னா கிங்ஸ் 19 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
>>9 வருடங்களின் பின்னர் இலங்கை வரும் இந்திய டெஸ்ட் குழாம்<<
LPL புள்ளிகள் அட்டவணையில் தலா 3 வெற்றிகளுடன் காணப்பட்ட இரண்டு அணிகளும் மோதிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கேப்ஸ் அணியானது தரப்பானது முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஜப்னா கிங்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்கள் பெற்றது.
ஜப்னா அணியின் துடுப்பாட்டத்தில் சதத்தினை நெருங்கியிருந்த இப்ராஹிம் ஷத்ரான் 65 பந்துகளில் 12 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 95 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் முதல் இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மைதான எல்லைகளைப் பதம் பார்த்த தவ்ஹித் ரிதோய் வெறும் 13 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார். அதேவேளை கமில் மிஷார 19 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றதமை குறிப்பிடத்தக்கது. கேப்ஸ் பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
பின்னர் 203 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு கேப்ஸ், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
கொழும்பு கேப்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம 44 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பின் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை பதிவு செய்தார்.
>>பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை மகளிர் அணி சாதனை<<
மறுமுனையில் ஜப்னா பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும், லிசார்ட் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுக்களையும் மொஹமட் சிராஸ், ட்ரவின் மெதிவ் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக இப்ராஹிம் ஷத்ரான் தெரிவாகியிருந்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















