பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB), இலங்கையைச் சேர்ந்த உடற்தகுதி மற்றும் வலிமை (Strength and Conditioning) பயிற்சியாளரான மரியோ வில்லவராயனை அதனது Rehab Center (மீள்சிகிச்சை மையம்) இன் தலைமை அதிகாரியாக நியமிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>குல்தீப் யாதவ் – ரிசப் பாண்ட் ஆகியோரை மாற்றீடு செய்யும் IPL அணிகள்<<
குறிப்பிட்ட Rehab Center இன் முகாமையாளராக செயற்பட்டு வந்திருந்த ஜூலியன் கலேபடோ தனது பதவியை 2023 இல் இராஜினாமா செய்த பின்னர் குறிப்பிட்ட நிலையத்தினை, பங்களாதேஷின் உள்ளூர் பயிற்சியாளர்களே நிர்வகித்து வந்திருந்தனர். இந்த நிலையிலேயே மரியோ வில்லவராயனிற்கு புதிய தலைமைப் பொறுப்பு வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் புதிய பொறுப்பு குறித்கு கிரிக்பஸ் (Cricbuzz) இணையதளத்திடம் பேசுகையில், “நாங்கள் மரியோவுடனான ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். மீள்சிகிச்சை நிலையப் பொறுப்பாளராக அவரை நியமிக்க உள்ளோம்,” என்று குறிப்பிட்டதோடு, மரியோ “எங்கள் பயிற்சியாளர்களுக்கும் பயிற்சி அளிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
>>சமரியின் சதத்துடன் இலங்கை அணிக்கு அபார வெற்றி<<
இதற்கு முன்னரும் பங்களாதேஷ் கிரிக்கெட்டுடன் இணைந்து செயற்பட்ட மரியோ 2014ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஆடவர் கிரிக்கெட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 52 வயதான அவர் 2020ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பணி புரிய தனது பதவியை இராஜினாமா செய்யும் வரை பங்களாதேஷ் அணிக்காக சேவை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே இது மரியோ மரியோ வில்லவராயன் பங்களாதேஷ் கிரிக்கெட்டுடன் இணையவிருக்கும் இரண்டாவது சந்தர்ப்பமாகும். மரியோ ஒகஸ்ட் மாதமளவில் தனது புதிய பொறுப்பில் இணைந்து பணியாற்ற ஆரம்பிப்பார் என நம்பப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















