பொட்ஸ்வானாவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் அஞ்சலோட்டப் போட்டிகளுக்கு (World Athletics Relays) இலங்கை 400 மீற்றர் அஞ்சலோட்ட அணி தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் சண்டிகரில் அண்மையில் நடைபெற்ற 3-வது இந்திய பகிரங்க அஞ்சலோட்டப் போட்டியில், இலங்கை 400 மீற்றர் அணி 3 நிமிடங்கள் 02.16 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்தது. இது இலங்கை தடகள வரலாற்றில் 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பதிவான இரண்டாவது சிறந்த நேரமாகும். அத்துடன், இவ்வருடத்தில் உலகளவில் பதிவு செய்யப்பட்ட சிறந்த நேரங்களின் வரிசையில் இலங்கை அணி தற்போது 10ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கை சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க
- ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் ஷானுக்க, சத்துரவுக்கு வெண்கலப் பதக்கங்கள்
- ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் லஹிரு
எதிர்வரும் மே மாதம் 2 மற்றும் 3-ம் திகதிகளில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் அஞ்சலோட்டப் போட்டிக்கு மொத்தம் 24 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் 8 இடங்கள் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டன. ஏனைய 16 இடங்கள் தற்போதைய உலகத் தரவரிசையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையிலேயே இலங்கை அணி 20ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையுடன் இணைந்து போட்டியை நடத்தும் பொட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், கத்தார், பிரித்தானியா, ஜமைக்கா, நெதர்லாந்து, பிரான்ஸ், கென்யா, போர்த்துக்கல், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஜிம்பாப்வே, சீனா, பிரேசில், இந்தியா, ஹங்கேரி, ஸ்பெய்ன், போலந்து, செனகல், ஜேர்மனி, நைஜீரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இவ்வருட உலக மெய்வல்லுநர் அஞ்சலோட்டப் போட்டித் தொடரில் களம் இறங்குகின்றன.
இலங்கை மெய்வல்லுநர் துறையில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளமை விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<





















