சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று (29) வெளியிட்டுள்ள புதிய T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முதலிடத்தை பிடித்துக்கொண்டார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்றுமுடிந்த 3 போட்டிகள் கொண்ட T20i தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-1 என வெற்றிக்கொண்டது. அதுமாத்திரமின்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரலாற்றில் முதல் தடவையாக T20i தொடர் வெற்றியொன்றினையும் அவ்வணி பதிவுசெய்திருந்தது.
இறுதி ஓவரில் வெற்றியைப் பறிகொடுத்த இலங்கை இளையோர் அணி
இந்த தொடரில் சிறந்த ஓட்டக்கட்டுப்பாட்டுடன் பந்துவீசிய ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீட் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறித்த இந்த பிரகாசிப்பின் காரணமாக இரண்டாவது இடத்திலிருந்த ரஷீட் கான், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்கவை பின்தள்ளி பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ரஷீட் கான் 710 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துக்கொண்டுள்ளதுடன், வனிந்து ஹஸரங்க 695 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அதேநேரம், பாகிஸ்தான் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பசல்ஹக் பரூகி 12 இடங்கள் முன்னேறி வனிந்து ஹஸரங்கவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் பசல்ஹக் பரூகி, ரஷீட் கான் மற்றும் முஜிப் உர் ரஹ்மான் (8வது இடம்) ஆகிய மூன்று வீரர்கள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர்.
அதேநேரம், பாகிஸ்தான் T20i அணியின் புதிய தலைவரான சதாப் கான் 6 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 12வது இடத்தையும், சகலதுறை வீரர்கள் வரிசையில் 8 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்.
துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்த பாபர் அசாம், ஒரு இடம் பின்னடைவை சந்தித்து 4வது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளதுடன், முதலிடத்தை தொடர்ந்தும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தக்கவைத்துள்ளார். இதேவேளை சகலதுறை வீரர்கள் வரிசையில் பங்களாதேஷ் அணியின் சகீப் அல் ஹஸன் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<