கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ள சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்காவை 199 ஓட்டங்களால் படுதோல்வியடையச் செய்த இலங்கை கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-0 என வைட்வொஷ் செய்து கைப்பற்றியிருக்கின்றது.
தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்டில் வெற்றியை நோக்கி முன்னேறும் இலங்கை அணி
கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில்…
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களினையும், தென்னாபிரிக்க அணி அவர்களது முதல் இன்னிங்ஸிற்காக 124 ஓட்டங்களினையும் குவித்திருந்தது. இதனையடுத்து, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்று தமது துடுப்பாட்டத்தினை நிறுத்திய பின்னர், போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளில் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த கடின வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி மூன்றாம் நாள் நிறைவில் 139 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் தியோனிஸ் டி ப்ரெய்ன் 45 ஓட்டங்களுடனும், டெம்பா பவுமா 14 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.
இன்னும் 351 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸினை இன்று போட்டியின் நான்காம் நாளில் தென்னாபிரிக்க அணி தொடர்ந்தது. தியோனிஸ் டி ப்ரெய்ன் போட்டி தொடங்கி சிறிது நேரத்திலேயே தனது அரைச் சதத்தினை பூர்த்தி செய்தார். இது அவருக்கு கன்னி டெஸ்ட் அரைச் சதமாகவும் இருந்தது. மறுமுனையில் டெம்பா பவுமாவும் சிறந்தமுறையில் செயற்பட்டு அவருடைய 11ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை கடந்தார்.
தென்னாபிரிக்காவை வீழ்த்த தந்திரோபாயங்களை கையாளுகிறதா இலங்கை?
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக எஸ்.எஸ்.சி..
இவர்களின் இணைப்பாட்டத்தினால் தென்னாபிரிக்க அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக இலங்கை அணிக்கு அழுத்தம் தரும் வகையில் ஒரு இணைப்பாட்டம் உருவாகியிருந்தது. 123 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டத்தினை இடதுகை சுழல் வீரரான ரங்கன ஹேரத் டெம்பா பெவுமாவின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். இலங்கையின் விக்கெட் காப்பாளரான நிரோஷன் திக்வெல்லவிடம் பிடிகொடுத்த டெம்பா பவுமா மொத்தமாக 63 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பவுமாவினை அடுத்து தென்னாபிரிக்க அணி நான்காம் நாளுக்கான மதிய போசனத்தை அடையும் போது புதிய துடுப்பாட்ட வீரராக வந்த நம்பிக்கை தரக்கூடிய குயின்டன் டி கொக்கின் விக்கெட்டினையும் ஹேரத்தின் சுழலினால் வெறும் 8 ஓட்டங்களுடன் இழந்தது.
தொடர்ந்து, நான்காம் நாளுக்கான மதிய போசனத்தினை 7 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களுடன் தடுமாற்றமான நிலையில் அடைந்த தென்னாபிரிக்கா, மதிய போசனத்தின் பின்னர், தமது எஞ்சியிருந்த மூன்று விக்கெட்டுக்களையும் மேலதிகமான 44 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்தது.
இதன்படி, 86.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது இரண்டாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற தென்னாபிரிக்க அணி பாரிய ஓட்ட வித்தியாசம் ஒன்றில் இலங்கை அணியுடன் தோல்வியினை தழுவியது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் தியோனிஸ் டி ப்ரெய்ன் அவரது கன்னி டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்து ஆறுதலளித்தார். 232 பந்துகளினை எதிர்கொண்ட டி ப்ரெய்ன் மொத்தமாக 101 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளம் தனன்ஜயவின் அதிரடி மாற்றத்திற்கான காரணங்கள்
இலங்கை அணிக்காக பந்துவீச்சு மற்றும் துப்பாட்டாம் இரண்டிலும் சோபித்த அகில..
இலங்கை அணியின் பந்துவீச்சில் ரங்கன ஹேரத் மொத்தமாக 98 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பினை வழங்கியதோடு, தில்ருவான் பெரேரா மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் இத்தொடரில் ஒரு சதம், மூன்று அரைச்சதங்கள் என்பவற்றை விளாசி மொத்தமாக 356 ஓட்டங்களை குவித்த இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவிற்கு வழங்கப்பட்டது.
நான்கு நாட்களிலேயே இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணி சுரங்க லக்மால் தலைமையில், தாம் விளையாடிய இறுதி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியினை பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் இலங்கை அணி, அடுத்ததாக அவர்களுடன் இடம்பெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதுகின்றது.
அந்த வகையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒரு நாள் தொடர் ஜூலை 29ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகின்றது.
ஸ்கோர் விபரம்
முடிவு – இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றி






















