24 ஆவது முறையாகவும் விமர்சையாக ஆரம்பமாகும் DSI SUPERSPORT பாடசாலை கரப்பந்தாட்டத் தொடர்

2
DSI

நாடுபூராகவுமுள்ள பாடசாலை கரப்பந்தாட்ட வீரர்களைத் தேசிய மட்டத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட DSI SUPERSPORT பாடசாலை கரப்பந்தாட்டத் தொடர், இம்முறை 24 ஆவது தடவையாக மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை விளையாட்டுத் துறையில் அதிக எண்ணிக்கையிலான அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடருக்கு டி. சேம்சன் அண்ட் சன்ஸ் (D. Samson & Sons) நிறுவனம் முழுமையான அனுசரணையினை வழங்குகின்றது. இப்போட்டித் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டித் தொடரின் மாவட்ட மட்டப் போட்டிகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், தேசிய மட்டத்திலான போட்டிகள் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையும், இறுதிப் போட்டிகள் நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளன.

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம், பாடசாலை கரப்பந்தாட்ட சங்கம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டித் தொடரில், இம்முறை நாடுபூராகவும் இருந்து சுமார் 3,500 பாடசாலை அணிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்றதுடன், இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி மே மாதம் 20 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>Photos – Press Conference – 24th DSI SUPERSPORT Schools Volleyball Championship 2026<<

போட்டிக்கான விண்ணப்பப்படிவங்களை நாடுபூராகவுமுள்ள அனைத்து வலயக் கல்வி அலுவலகங்களின் விளையாட்டுப் பணிப்பாளர்கள், மாகாண விளையாட்டுப் பணிப்பாளர்கள் அல்லது கரப்பந்தாட்ட சங்கத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், DSI SUPERSPORT உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலுள்ள QR குறியீடு மூலமாகவோ அல்லது 2669344 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலமாகவோ விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

திறமையான பாடசாலை வீரர்களை அடையாளம் காண்பதற்காகத் தனது தந்தை நந்ததாச ராஜபக்ஷ அவர்களால் 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த DSI SUPERSPORT கரப்பந்தாட்டத் தொடர், நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவது குறித்து மகிழ்ச்சியடைவதாக DSI நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் துசித ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘DSI SUPERSPORT கரப்பந்தாட்டத் தொடர் தொடர்ச்சியாக ஒரு சிறப்பான பணியைச் செய்து வருகின்றது. இளைஞர், யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணர இது ஒரு சிறந்த தளமாகும். எமது தேசிய விளையாட்டை ஊக்குவிப்பதிலும், அபிவிருத்தி செய்வதிலும் தீர்மானமிக்கதொரு பங்காற்றக் கிடைப்பதையிட்டுப் பெருமிதம் கொள்கிறோம்.’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<