தொடர்ந்து முன்னிலை வகிக்கும் மென்சஸ்டர் சிடி

142

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற போட்டியில் மென்சஸ்டர் சிடி அணி ஆர்சனல் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றதன்மூலம் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கின்றது.

அதேவேளை, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள மென்சஸ்டர் யுனைடட் அணி, செல்சி அணியுடன் தோல்வியுற்றதன் மூலம் மென்சஸ்டர் சிடி அணியை விட 8 புள்ளிகள் பின்னிலையிலுள்ளது.  

மென்சஸ்டர் சிடி எதிர் ஆர்சனல்

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி மென்சஸ்டர் சிடி கால்பந்து கழகத்தின் மென்சஸ்டர் அரங்கில் நடைபெற்றது. போட்டி ஆரம்பமாகும் முன் மென்சஸ்டர் சிடி அணியின் முன்கள வீரரான ஸர்ஜியோ ஆக்வேரோ (Sergio Aguero) தனது அணிக்காக அதிகமான கோல்களை பெற்றதற்காக அவ்வணியின்  மூலம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

றியல் மட்றிட் அணியை நிலைகுலையச் செய்த டொடென்ஹம்

UEFA சம்பியன் கிண்ணச் சுற்றுப்போட்டியில் றியல்..

போட்டியை ஆரம்பித்த இரு அணிகளும் முதல்பாதியில் ஓரளவு சரிசமமான ஆதிக்கத்தை வழங்கின. எனினும் இரண்டாம் பாதியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் ஆரம்பித்த மென்சஸ்டர் சிடி அணி, தனது வழமையான அதிரடி ஆட்டத்தை எதிரணிக்கு வழங்கியதன் மூலம் போட்டியை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாம் பாதியை பொறுத்தவரை மென்சஸ்டர் சிடியின் ஆதிக்கமே போட்டியில் அதிகமாக தென்பட்டது.

மென்சஸ்டர் சிடி அணிக்கான முதலாவது கோல் போட்டியின் 19ஆம் நிமிடத்தில் மத்தியகள வீரரான டி.பூருனே (De Bruyne) மூலம் பெறப்பட்டது. மத்தியகள வீரரான பெர்னான்டினியோ (Fernandinho) மற்றும் டி.பூருனே ஆகியோருக்கிடையில் எதிரணியின் பெனால்டி எல்லைக்கருகில் நடைபெற்ற சிறந்த பந்துப்பரிமாற்றத்தின் பின்னரே குறித்த கோல் பெறப்பட்டது.

போட்டியை சமப்படுத்துவதற்காக ஆர்சனல் அணி முதல் பாதியில் கடுமையான முயற்சிகளை எடுத்தபோதும் அவை மென்சஸ்டர் சிடி அணியின் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டன.

இரண்டாம் பாதியை ஆரம்பித்த மென்சஸ்டர் சிடி அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தது. அதன் பலனாக போட்டியின் 50ஆம் நிமிடத்தில் ஆர்சனல் அணியின் பின்கள வீரரான முன்ரீயல் (Monreal) மூலம் பெனால்டி எல்லையில் எதிரணியின் ரஹீம் ஸ்டேர்லீக் (Raheem Sterling) மீது விடுக்கப்பட்ட சவாலிற்காக மென்சஸ்டர் சிடி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பை பெற்ற ஸர்ஜியோ ஆக்வேரோ பந்தை வலதுபக்க மூலையினூடாக கோலுக்குள் செலுத்தி தனது அணிக்கான இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.

இறுதி நிமிட கோலினால் இராணுவப்படையை வீழ்த்திய ரினௌன்

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 10ஆவது…

அதனைத் தொடர்ந்து 14 நிமிடங்களின் பின்னர் மாற்று வீரராக களமிறங்கிய லகஸாட்டே (Lacazette) மூலம் ஆர்சனல் அணிக்கான முதல் கோல் பெறப்பட்டது. இரண்டாம் கோலைப் பெறுவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த ஆர்சனல் அணிக்கு போட்டியின் 74ஆம் நிமிடத்தில் மீண்டும் சவால் விடுக்கப்பட்டது.  

சில்வா வழங்கிய பந்தின் மூலம் கப்ரீயல் ஜேஸஸ் (Gabriel Jesus) தனது அணிக்கான மூன்றாவது கோலை பெற்றார். இதன்போது ஆர்சனல் அணி வீரர்களால் ஓப் சைடிற்கான (OffSide) வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் நடுவர் அதனை வழங்க மறுத்தார்.

மென்சஸ்டர் சிடி அணி பெற்ற மேலதிகமான இரண்டு கோல்களின் மூலம் போட்டியை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அவ்வணி வெற்றி பெற்றது.

மென்சஸ்டர் யுனைடட் எதிர் செல்சி

அதே தினம் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் மற்றும் செல்சி அணிகளுக்கு இடையிலான போட்டியானது இறுதித் தருணம் வரை விறுவிறுப்பாகவே அமைந்தது. செல்சி கால்பந்து ரசிகர்களின் முன்னிலையில், செல்சி அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை மென்சஸ்டர் யுனைடட் அணி ஆரம்பித்தது.

புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு, செல்சி அணி முதல் பாதியின் துவக்கம் முதல் போட்டி நிறைவடையும் வரை அதிகமான அளவு சவால் வழங்கியது.  

மென்சஸ்டர் யுனைடட் அணியின் முன்களம் மற்றும் மத்திய களத்தின் வழமையான சிறப்பான ஆட்டத்தை நேற்றயை தினம் அவதானிக்க முடியவில்லை. எனினும் செல்சி அணியின் நேற்றயை போட்டியின் பந்துப்பரிமாற்றம் மற்றும் அதிரடியாக கோலை பெறுவதற்காக எடுக்கும் முயற்சிகள் என்பன மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு மிகவும் சவாலாகவே அமைந்தது.  

ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா?

விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை….

போட்டியின் 7ஆம் நிமிடத்தில் செல்சி அணியின் பின்கள வீரரான அலென்ஸோ (Alonso) மூலம் பெனால்டி எல்லையிலிருந்த முன்கள வீரரான அல்வாரோ மொராடாவை (Alvaro Morata) நோக்கி நீண்ட தூரப் பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட பந்தை, மென்சஸ்டர் யுனைடட் அணியின் பின்கள வீரர் பீல் ஜோன்ஸ் (Phil Jones) தடுத்தாட முயன்றார். பீல் ஜோன்ஸ் மூலம் தடுத்தாடப்பட்ட பந்தானது, எதிர்பாராத விதமாக கோலினுள் சென்றது. எனினும் பீல் ஜோன்ஸ் பந்தை தடுத்தாடும் போது எதிரணி வீரரால் முறையற்ற முறையில் சவால் விடுக்கப்பட்டதால் நடுவர் கோலை வழங்க மறுத்தார்.

எனினும், போட்டியின் 55ஆம் நிமிடத்தில் பின்களத்திலிருந்து அஸ்பிலீகீயுடா (Azpilicueta) மூலம் பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை, அல்வாரோ மொராடா எதிரணியின் பின்கள வீரர்களையும் தாண்டி, கோலிற்கு தொலைவிலிருந்து தனது தலையால் பந்தை முட்டி கோலாக்கினார். இதன் மூலம் போட்டியில் 1-0 என செல்சி முன்னிலை பெற்றது.

போட்டியில் சற்று ஆர்வம் காட்டிய மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு போட்டியின் 90ஆம் நிமிடத்தில் சிறந்த வாய்ப்பொன்று கிட்டியது. எனினும், அதன் மூலம் தனது அணிக்கான கோலை அவர்களால் பெற முடியவில்லை. எனவே, செல்சி பெற்ற 1 கோலின் மூலம் அவ்வணி போட்டியில் வெற்றியை தனதாக்கியது.

10 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் கொழும்பு அணி

இந்தியாவின் கொச்சின் நகரில் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி..

மேலும் சில போட்டி முடிவுகள்

 

ஸ்டோக் சிடி 2 – 2 லயஸ்டர் சிடி          

டொடன்ஹாம் 1 – 0 கிறிஸ்டல் பெலஸ்

பர்னமவுத் 1   – 0  நியு காஸ்ல                   

எவர்டன் 3 – 2 வொர்ட்புர்ட்

பரய்டன் 1 – 0 ஸீவஸேனா சிடி  

பர்ன்லி 1  – 0 ஸவுதம்டன்

ஹடர்ஸ்வீய்ல்ட் 1 – 0 வெஸ்ட் பூரும்

லிவர்புல் 4 – 1 வெஸ்ட் ஹாம்