வெளிநாட்டு வீரர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கவுள்ள ஐ.பி.எல் ஏலம்

1796

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரின், அடுத்த பருவகால போட்டிகளுக்கான ஏலத்தில் 50 உள்ளூர் வீரர்கள் உட்பட 70 வீரர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படுவார்கள் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

ஐ.பி.எல் தொடரின் தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

உலகின் மிகப் பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். தொடரில் இலங்கை…

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 18 ஆம் திகதி ஜெய்பூரில் நடைபெறவுள்ளதாக நேற்றைய தினம் (3) ஐ.பி.எல் நிர்வாகக் குழு அறிவித்ததைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்படும் வீரர்கள் எண்ணிக்கை குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள ஏலத்தில் மொத்தமாக 70 வீரர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் கட்டயாமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் 50 பேர் உள்ளடக்கப்படுவார்கள் எனவும், மேலதிகமாக உள்ள 20 இடங்களுக்கு மாத்திரமே வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் 169 வீரர்கள் ஏலத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில்,  இதில் 56 வெளிநாட்டு வீரர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர். அதேநேரம், 18 வீரர்கள் மாத்திரமே தக்கவைப்பு (Retained) பட்டியல் மூலமாக அணிகளுக்குள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், இம்முறை ஐ.பி.எல். வீரர்கள் தெரிவுசெய்யும் விதிகளில் நிர்வாகம் மாற்றங்களை கொண்டு வந்திருந்த நிலையில், அணிகள் அதிகமான வீரர்களை தக்கவைத்திருந்தன. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தக்கவைப்பு வீரர்கள் பட்டியலில் 44 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 130 வீரர்களை அணிகள் தக்கவைத்திருந்தன. இதன் காரணமாக இம்முறை ஏலத்தின் மூலம் எடுக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட குறைவடைந்துள்ளது.

இம்முறை நடைபெற்ற வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 23 வீரர்களை தக்கவைத்திருந்ததுடன், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகமாக 11 வீரர்களை விடுவித்திருந்தது. இதன் அடிப்படையில், சென்னை அணி இம்முறை ஏலத்தில் மேலதிகமாக 2 வீரர்களை மாத்திரம் தங்களது அணியில் இணைத்துக்கொள்ள முடியும். 

ஐ.பி.எல். இல் அதிக இலங்கை வீரர்கள் இடம்பெற வேண்டும் என்கிறார் பர்வீஸ் மஹரூப்

குசல் மெண்டிஸ், திசர பெரேரா போன்ற இலங்கையின் பல வீரர்களுக்கு ஐ.பி.எல்…

 

இதேநேரம்,  டெல்லி டேர்டெவில்ஸ் அணி 15 வீரர்களை தக்கவைத்துள்ளதுடன், அவர்களால் மேலும் 10 வீரர்களை தங்களது அணிக்காக வாங்க முடியும்.  அதுமாத்திரமின்றி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 வீரர்கள், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 வீரர்கள், மும்பை இந்தியன்ஸ் அணி 7 வீரர்கள், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 9 வீரர்கள், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 வீரர்கள் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 5 வீரர்கள் என அணிகள் தங்களுடைய வீரர்களை இணைத்துக்கொள்ள முடியும்.

முக்கியமாக, இந்த அணிகள் அனைத்திலும் இணைக்கப்படும் வெளிநாட்டு வீரர்களுக்கான எண்ணிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கொல்கத்தா அணியில் மாத்திரமே அதிகமாக 5 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும் என்பதுடன், சென்னை அணியில் மேலதிக வெளிநாட்டு வீரர்களை இணைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று சன்ரைசஸ், பெங்களூர் அணிகள் தலா 2 வீரர்கள்,  ராஜஸ்தான், டெல்லி அணிகள் தலா 3, மும்பை ஒன்று மற்றும் பஞ்சாப் அணி 4 வீரர்கள் என வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<