இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவருக்கு இடைக்காலத் தடை

82
Former SLC President Sumathipala

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு, இலங்கை கிரிக்கெட்டில் எந்தவொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை சட்டக்கோவைக்கு அமைவாக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கிடைத்துள்ள அதிகாரப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வீரர்கள் இன்றி பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி

இம்மாத கடைசில் இடம்பெறவுள்ள இலங்கை அணியின் பாகிஸ்தான்…

இதன்படி, திலங்க சுமதிபால மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்வரை அவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எந்தவொரு பதவியிலும் அல்லது நிர்வாகச் செயற்பாடுகளிலும் ஈடுபடாத வகையில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விசேட உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திலங்க சுமதிபால கிரிக்கெட் நிர்வாகத்தில் மீண்டும் இணைய முடியுமா? என்பதைக் ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க, விளையாட்டு துறை பணிப்பாளர் தம்மிக முத்துகல தலைமையிலான மூவர் அடங்கிய குழுவையும் விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்துள்ளார்.

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எந்தவொரு நிருவாக சபைக் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கும், வாக்களிப்பதற்கும் அதன் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவை தடுக்குமாறு இத்தால் உத்தரவிட்டுள்ளது

அத்துடன், நிருவாக உத்தியோகத்தராகவோ அல்லது முன்னாள் தலைவராகவோ திலங்க சுமதிபால செயற்படுவதையும் தடுக்குமாறு இத்தால் உத்தரவிடுகிறது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

பிலியந்தல டவுன் விளையாட்டுக் கழகத்தினால் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை அடுத்து 1973ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை சட்டக்கோவை பிரிவு 39 (01)இன் 25ஆவது இலக்கத்துக்கு அமையவும், அதன் திருத்தங்களுக்கு அமையவும் இந்த உத்தரவை இலங்கை கிரிக்கெட் சபைக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிறப்பித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் அண்மையில் வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு இலங்கை கிரிக்கெட்டின் நிருவாக சபையின் உறுப்பினராக செயற்பட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

சூதாட்டம், ஆட்டநிர்ணயம் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்களுக்கு இலங்கை கிரிக்கெட்டின் உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சரினால் அண்மையில் வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இளையோர் ஆசியக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் தோல்வி

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், இன்று (10) பங்களாதேஷ்.

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை விசாரணை செய்து சுமார் ஒரு மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல, விளையாட்டுத்துறை அமைச்சின் சட்டத்துறை அதிகாரி ஷிரோமி ரணவக்க, ஓய்வு நிலை சிரேஷ்ட விமானப்படை அதிகாரி சட்டத்தரணி எஸ்.டி பியதாச ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்றையும் விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, குறித்த இடைக்காலத் தடை குறித்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட திலங்க சுமதிபால

”இந்த அமைச்சரவை பத்திரத்தினால் ஏதாவது பிரச்சினைகள் வருமாயின் அதற்கு முகங்கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். என்னைப் பொறுத்தமட்டில் இந்த அமைச்சரவைப் பத்திரம் வரவேற்கத்தக்கது. ஆனால் இதை அடிப்படையாகக் கொண்டு ஒருசிலர் எனக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அதேபோல, எனது 25 வருடகால கிரிக்கெட் நிருவாகத்தில் ஒருபோதும் கிரிக்கெட் ஆட்டநிர்யணத்தில் நான் ஈடுபட்டதே கிடையாது. எனது நிருவாகத்தின் கீழ் இருந்த எந்தவொரு அதிகாரியும் அந்த தவறை செய்யவில்லை. அணியில் விளையாடிய வீரர்களுக்கும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை

இதனால் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினால் என்னை குற்றவாளியாக தீர்மானிப்பது தவறாகும். நான் எப்போதும் ஊடங்களுக்கு உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன். இலங்கையில் எந்தவொரு சூதாட்ட நிறுவனத்துடனும் நான் தொடர்புடையவன் அல்ல. எனது குடும்பமும் அப்படித்தான்” என தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<