எதிர்வரும் (ஜூன் மாதம்) 17ஆம், 18ஆம் திகதிகளில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெறவுள்ள கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குகொள்வதற்காக இலங்கை வீர வீராங்கனைகள் 8 பேர் அந்நாட்டிற்கு இன்று (15) பயணமாகியுள்ளனர்.

பல சாதனைகளுடன் நிறைவுற்ற ஆசிய மெய்வல்லுனர் தெரிவுகாண் போட்டிகள்

நடைபெறவிருக்கும் ஆசிய மற்றும் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை..

இச் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெறும் இலங்கைக் குழாமில் 6 ஆண்களும் இரண்டு பெண்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறுந்தூர (100M) ஓட்ட வீரரான மொஹமட் அஷ்ரபும் இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள அஷ்ரப், அண்மையில் இடம்பெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான முதலாவது தகுதிகாண் போட்டிகளில் முதல் இடத்தையும் இரண்டாவது தகுதிகாண் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். தொடர்ச்சியான சிறந்த பயிற்சிகளுடன் உள்ள அஷ்ரப் இத் தொடரில் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் பங்கு கொள்ளும் அடுத்த வீரராக கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை நிலைநாட்டியுள்ள இஷார சதருவன் உள்ளார். இவர் அண்மையில் இடம்பெற்ற தேசிய மட்ட தெரிவுப் போட்டிகளில் 5.11 மீட்டர் உயரம் பாய்ந்து தனது சொந்த சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதோடு, 400M தடகள வீரரான அரவிந்த சமரநாயக்கவும் ஏழுபேர் கொண்ட இலங்கை அணியில் அங்கம் வகிக்கின்றார். மேலும், இக்குழுவானது நீளம் பாய்தல் வீரரான கிரேஷான் தனன்ஞய, முப்பாய்ச்சல் வீரரான அதீத கருணசிங்க, 800M ஓட்ட வீரரான HMS குமார, உயரம் பாய்தல் வீராங்கணையான துலாஞ்சலி ரணசிங்க மற்றும் முப்பாய்ச்சலில் கனிஷ்ட பிரிவில் தேசிய சாதனையை பதிவு செய்த வீராங்கணை ஹாசினி பிரபோதா பாலசூரிய ஆகியோரினையும் கொண்டுள்ளது.  

சமரநாயக்கவின் பயிற்சியாளரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றவருமான முன்னாள் வீரர் உதார ஜயசுந்தர இலங்கையில் இருந்து பயணம் மேற்கொள்ளும் இக் குழுவிற்கு முகாமையாளராக செயற்படவுள்ளார்.

கிர்கிஸ்தான் பயிணிக்கும் இலங்கை அணி

மொஹமட் அஷ்ரப் – 100M
இஷார சதருவன் – கோலூன்றிப் பாய்தல்
அரவிந்த சமரநாயக்கக – 400M தடைதாண்டல்
கிரேஷான் தனன்ஞய – நீளம் பாய்தல்
அதீத கருணசிங்க – முப்பாய்ச்சல்
HMS குமார – 800M
துலாஞ்சலி ரணசிங்க – உயரம் பாய்தல்
ஹாசினி பிரபோதா பாலசூரிய – முப்பாய்ச்சல்

அணியின் முகாமையாளர் – அசோக ஜயசுந்தர

இலங்கையிலிருந்து பங்குகொள்ளும் வீரர்கள் குழாம், கிர்கிஸ்தான் நாட்டில் சாதனைகள் புரிய ThePapare.com சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

>> இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித்த தெரிவு