விறுவிறுப்பான ஆட்டத்தை பௌண்டரி மூலம் சமப்படுத்திய மேற்கிந்திய தீவுகள்

475

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான இரண்டாவது ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் (Tie) முடிவுக்கு வந்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லியின் அதிரடி 157 ஓட்டங்களின் உதவியுடன் இந்திய அணி 321 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷாய் ஹோப்பின் இறுதிப் பந்து பௌண்டரியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்று போட்டியை சமப்படுத்தியது.

ரோகித் ஷர்மா மற்றும் கோஹ்லியின் அதிரடியால் இந்திய அணிக்கு அபார வெற்றி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் சிக்கர் தவான் ஆகியார் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் ராயுடு 73 ஓட்டங்களை பெற்று விக்கெட்டினை பறிகொடுக்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் தனது 10,000 ஓட்டங்களை கடந்தார். வெறும் 205 இன்னிங்சுகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். டெண்டுல்கர்  259 இன்னிங்சுகளில் 10,000 ஓட்டங்களை கடந்திருந்தார்.

இதன்படி பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த விராட் கோஹ்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அதிரடியாக துடுப்பாடிய இவர் 129 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 157 ஓட்டங்களை குவித்தார். இவருடன் டோனி 20 ஓட்டங்களையும்,  ரிஷாப் பாண்ட் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதனடிப்படையில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. பந்து வீச்சில் மெக்கோய் மற்றும் ஆஷ்லி நேர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு கடுமையான சவாலைக் கொடுத்திருந்தது. அணியின் ஆரம்பம் ஓரளவு சிறப்பாக அமைந்திருந்தது. பவல் 18 ஓட்டங்களையும், சந்திரபோல் ஹேம்ராஜ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மையர் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிக்க, ஷாய் ஹோப் அணி நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார்.

இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 143 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை பதம் பார்த்த ஹெட்மையர் 64 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷாய் ஹோப் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஜோடி 47 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, ஜேசன் ஹோல்டர் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் இளையோர் அணியை சுழலால் மிரட்டிய அஷான், ரொஹான் ஜோடி

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை…

இறுதியில் ஒரு ஓவருக்கு 14 ஓட்டங்கள் என்ற நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களை பெற்று போட்டியை சமப்படுத்தியது. முக்கியமாக இறுதிப் பந்தில் 5 ஓட்டங்கள் என்ற நிலையில், ஷாய் ஹோப் பௌண்டரி விளாசி போட்டியை சமப்படுத்தினார். இறுதிவரை வெற்றிக்காக போராடிய ஷாய் ஹோப் இரண்டாவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்து 123 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் அடிப்படையில், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்குமான மூன்றாவது ஒருநாள் போட்டி 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 321/6 (50) – விராட் கோஹ்லி 157, அம்பத்தி ராயுடு 73, ஆஷ்லி நர்ஸ் 46/2

மேற்கிந்திய தீவுகள் – 321/7 (50) – ஷாய் ஹோப் 123, சிம்ரொன் ஹெட்மையர்  94, குல்தீப் யாதவ் 67/3

முடிவு சமனிலை (Tied)

ஆட்டநாயகன்விராட் கோஹ்லி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க