இலங்கை தேசிய கால்பந்து அணியில் இடம்பெற்ற அதிரடி மாற்றங்கள்

658

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண கால்பந்து தொடர்களுக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டிகளுக்கான 31 வீரர்கள் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

குறித்த இரண்டு போட்டித் தொடர்களுக்கும் மாகாவு அணிக்கு எதிரான இரண்டு கட்டங்களைக் கொண்ட (Legs) ஒரேயொரு தகுதிகாண் போட்டி மாத்திரம் நடைபெறவுள்ளது.  

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான உத்தேச இலங்கைக் குழாம்

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள AFC

இந்த நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய அணியின் குழாத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, லாவோஸ் அணியுடன் நடைபெறவுள்ள சிநேகபூர்வ போட்டி மற்றும் மகாவு அணியுடன் நடைபெறவுள்ள 2 கட்டங்களைக் கொண்ட உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்கு முன், அணியை ஆயத்தப்படுத்த இலங்கை குழாம் அடுத்த வாரம் கட்டாருக்கு பயணமாகவுள்ளது.

இதேநேரம், இந்தக் குழாத்தில் 2018 செப்டம்பர் மாதம் நடைபெற்ற SAFF சுசுகி கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்ற இலங்கை குழாத்தில் இருந்து பல வீரர்கள் உள்வாங்கப்பட்டும் வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற SAFF சுசுகி கிண்ணத்தில் பங்கேற்ற 20 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் இடம்பெற்ற வீரர்களில் ஒன்பது வீரர்கள் மாத்திரமே தமது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.  

இதன்படி, கவிந்து ஷான், ஹர்ஷ பெர்னாண்டோ, சுஜான் பெரேரா, ஷரித்த ரத்னாயக்க, மொஹமட் பசால், டக்சன் பியுஸ்லஸ், சசங்க தில்ஹார, மரியதாஸ் நிதர்ஷன் மற்றும் ஜூட் சுமன் ஆகியோர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் தொடர்ந்து தமது இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளனர்.

இந்த வீரர்கள் அனைவரும் அண்மையில் நிறைவுக்கு வந்த டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் மற்றும் 2018 எப். கிண்ண கால்பந்து தொடர்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக இலங்கை அணி ஒருமாத திட்டம்

மகாவு அணிக்கு எதிரான பிஃபா உலகக் கிண்ணத்திற்கான ஆரம்ப கட்ட தகுதிகாண் போட்டிக்காக இலங்கை தேசிய

வெளியேற்றப்பட வீரர்கள்

இந்தக் குழாத்தில் இருந்து மொஹமட் ரிப்னாஸ், அபீல் மொஹமட் மற்றும் அசேல மதுஷான் ஆகிய மூன்று வீரர்களும் தொடர் உபாதைகள் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.  

இதில் முக்கிய மாற்றமாக, இறுதியாக நடைபெற்ற ஐந்து சர்வதேச கால்பந்துப் போட்களில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்ட சுபாஷ் மதுஷான் இலங்கை குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உடற்தகுதியை நிரூபிக்க தவறிய காரணத்தால் அவரை அணியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேநேரம், அண்மைக்காலமாக உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த சர்வான் ஜோஹார், கவீஷ் பெர்னாண்டோ, தனுஷ் ராஜபக்ஷ, அசிகுர் ரஹ்மான், பண்டார வரகாகொட, சஜித் குமார மற்றும் டிலான் கௌஷல்ய ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர்.  

இதில் சஜித் குமார மற்றும் டிலான் கௌஷல்ய ஆகிய இருவரும் அண்மைக்காலமாக தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளதுடன், ஏனைய வீரர்கள் போதியளவு உடற்தகுதியை நிரூபிக்கத் தவறியது மற்றும் திறமைகளை வெளிப்படுத்தாத காரணத்தாலும் இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  

அதேபோல, கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்த ஒருசில முக்கிய வீரர்களுக்கும், 23 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெற்ற வீரர்களும் இலங்கை குழாத்தில் தமக்கான இடத்தைப் பெற்றுள்ளனர்.

இவர்களுள் நிரான் கனிஷ், சமோத் டில்ஷான், மொஹமட் அஸ்மிர், தனுஷ் மதுஷங்க, சதுரங்க சன்ஜீவ, மஹேந்திரன் தினேஷ், தனுஷ் பெரேரா, அமான் பைஸர், தனன்ஞய லக்ஷான் மற்றும் ரிப்கான் மொஹமட் ஆகியோர் தமது இடத்தை பறிகொடுத்துள்ளர்.

புதுமுக வீரர்கள்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாத்தில் 22 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2020ஆம் ஆண்டுக்கான AFC 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாடிய ஷபிர் ரசூனியா, ராசிக் றிஷாட், பெதும் விமுக்தி மற்றும் சுந்தராஜ் நிரேஷ் ஆகிய நான்கு வீரர்களும் முதற்தடவையாக தேசிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேநேரம், அண்மையில் நிறைவுக்கு வந்த சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் விளையாடாத ஏழு வீரர்களுக்கு இம்முறை இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். மொஹமட் முஸ்தாக் (நிவ் ஸ்டார்), மொஹமட் இஜாஸ் மற்றும் மொஹமட் வசீத் (இலங்கை இராணுவம்), அப்துல் ரகுமான் இசதீன் (சிறைச்சாலைகள் வி.க), சித்ததுறை சஹாய ராஜா (சென். லூசியா), செபெஸ்தியம் பிள்ளை ஜேசுதாசன் (விமானப்படை) மற்றும் ஹெமில்டன் மெர்வின் (ஈஸ்ட்பேர்ன் போரோஇங்கிலாந்து) ஆகிய வீரர்கள் இலங்கை குழாத்தில் புது முகங்களாக முதல் முறை இடம்பிடித்துள்ளனர்.

இதனிடையே, அண்மைக்காலமாக கழகமட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி AFC 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப் பீரிஸ், நவீன் ஜூட் மற்றும் மொஹட் ஆகிப் ஆகிய மூவரும் இலங்கை குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை கால்பந்து அணியின் உதவி பயிற்சியாளராக ஜானக்க சில்வா

இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நேவி சீ ஹொக்ஸ் விளையாட்டுக்

இதேவேளை, மொஹமட் சஹீல் (நேவி சி ஹோக்ஸ்) மற்றும் மொஹமட் லுத்பியும் (இலங்கை இராணுவம்) ஆகிய வீரர்களும் இலங்கை தேசிய அணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மொஹமட் லுத்பி அண்மையில் நிறைவுக்கு வந்த எப். கிண்ணம் மற்றும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்களில் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்கக் கையுறை விருதுகளை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 31 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம், எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கட்டார் சென்று விசேட பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

அதன்பிறகு, எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை லாவோஸ் தேசிய அணியுடன் 2 போட்டிகளைக் கொண்ட சிநேகபூர்வ கால்பந்து தொடரில் விளையாடவுள்ளது.

அதனைத்தொடர்ந்து தெரிவுசெய்யப்படும் 23 பேர் கொண்ட இலங்கை குழாம், 2022 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் பூர்வாங்க தகுதிகாண் போட்டியின் முதல் கட்ட மோதலில் எதிர்வரும் ஜூன் மாதம் 06ஆம் திகதி மகாவு அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க