உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கு தயாராகும் இலங்கை

142

இலங்கை வலைப்பந்தாட்ட அணி, கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் சம்பியனாகத் தெரிவாகியதை அடுத்து எதிர்வரும் ஜுலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இதன்படி, உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடருக்கு இன்னும் 5 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், இலங்கை அணியின் ஆயத்தம் மற்றும் பயிற்சிகள் குறித்து அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாச எமது இணையத்தளத்துக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

ஆசியாவில் சம்பியனாகும் கனவுடனே களமிறங்கினோம் – திலகா ஜினதாச

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் ……..

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடருக்கான ஆயத்தம் பற்றி சொல்லுங்கள்?

நாங்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் தகுதிப்படுத்தல் பயிற்சிகளை (Conditionin Training) முன்னெடுத்து வருகின்றோம். தற்போது மைதானத்திற்குச் சென்று விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டது. எனது வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை திறன்காண் போட்டித் தொடரொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் பங்கேற்க மலேஷிய வலைப்பந்தாட்ட அணி தமது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

தற்போது எமது சிரேஷ்ட மற்றும் இளையோர் அணிகள் ஒன்றாக பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. எனவே குறித்த போட்டித் தொடரில் இன்னுமொரு அணியை இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். அதேபோல, சிங்கப்பூர் அணி கடந்த வருடம் இலங்கைக்கு வந்து விளையாடியது போல நாங்களும் அங்கு சென்று விளையாடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இப்போட்டியை நடத்துவதால் எமது வீராங்கனைகளின் திறமைகள் எந்தளவு தூரத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது தொடர்பிலும், போட்டிக்கு முகங்கொடுப்பதற்கான அவர்களது ஆயத்தம் குறித்தும், அவர்கள் போட்டியின் போது எவ்வாறான திட்டங்களை வகுத்துக்கொண்டு விளையாடுகின்றார்கள் என்பது தொடர்பிலும் எம்மால் இனங்கண்டு கொள்ள முடியும்.

அத்துடன், எம்மைவிட முன்னிலையில் உள்ள அணிகளுடன் போட்டியிடுவதைக் காட்டிலும், எமக்கு சமமாக உள்ள ஒரு அணியுடன் எமது வீராங்கனைகள் எவ்வாறு விளையாடுகின்றார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். எனவே, எதிரணியினை எவ்வாறு முகங்கொடுப்பது தொடர்பில் இனங்காண எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள போட்டித் தொடரானது மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளது.

அதேபோல, எதிர்வரும் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் அளவில் நாங்கள் மற்றுமொரு வெளிநாட்டு போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளோம். அங்குள்ள நிலைமைகளுக்கு அமைய எமது வீராங்கனைகள் எவ்வாறு விளையாடுகின்றார்கள் என்பதை மேற்பார்வை செய்வது தான் அந்தப் போட்டியின் நோக்கமாகும்.

இதற்கு முன் நாங்கள் மலாவிக்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்தோம். அதேபோல இம்முறை மற்றுமொரு ஆபிரிக்க நாடொன்றுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இம்முறை வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் முதலாவது போட்டியில் நாங்கள ஜிம்பாப்வே அணியை எதிர்த்தாடவுள்ளோம். அதன் பிறகு வட அயர்லாந்து அணியை சந்திக்கவுள்ளோம். அந்த இரண்டு அணிகளுடன் வெற்றிபெற முடியும் என நான் நம்புகிறேன். இவ்வனைத்து முன் ஏற்பாடுகளும் உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும். உண்மையைச் சொன்னால் நான் இதுவரை உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டித் தொடரை வெற்றிக்கொள்வதே எனது முதலாவது குறிக்கோளாகும்.

அதேபோல, உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னரே லிவர்பூல் செல்வதற்கான ஆயத்தங்களை முன்னெடுக்குமாறு நான் வலைப்பந்தாட்ட சம்மேளனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் அங்குள்ள கழகங்களுடன் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதுதான் முதல் திட்டமாகும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என வலைப்பந்தாட்ட சம்மேளனம் வாக்குறதி அளித்துள்ளது. இவ்வனைத்து திட்டங்களையும் உரிய காலப்பகுதியில் செய்ய முடியுமானால் கடந்தகாலங்களைப் போல அல்லாமல் இம்முறை வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் எம்மால் சாதிக்க முடியும் என நம்புகிறேன்.

வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம்

சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த 11ஆவது ஆசிய……

தேசிய அணியில் மாற்றங்கள் இடம்பெறுமா?

நாங்கள் அண்மையில் தான் தெரிவுப் போட்டியொன்றை நடாத்தியிருந்தோம். இதில் 2 முக்கிய வீராங்கனைகள் உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால் 15 பேருக்குப் பதிலாக 17 பேரை இதன்போது தெரிவு செய்தோம். உபாதைக்குள்ளான 2 பேரும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளாவர். எனினும், நாங்கள் மேலதிகமாக 2 வீராங்கனைகளை அணிக்குள் உள்வாங்கியுள்ளோம். அதன்படி, தற்போது 17 வீராங்கனைகளை உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் இணைத்துக் கொண்டுள்ளோம்.

இந்த நிலையில், அடுத்த தெரிவுப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதன்போது 15 பேர் கொண்ட குழாத்தை பெயரிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதன்பிறகு தொடர்ந்து பயிற்சி முகாம்களை நடாத்தி 12 பேர் கொண்ட இறுதிக் குழாமை மேலதிக 3 வீராங்கனைகளை அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம்.

உபாதைக்குள்ளாகியுள்ள இரண்டு வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்குப் பதிலாக தெரிவு செய்யப்பட்டுள்ள வீராங்கனைகள் யார்?

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குகொள்ளாத புதுமுக வீராங்கனைகள் இரண்டு பேரை தெரிவு செய்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நான் ஏற்கனவே கூறியது போல ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிய வீராங்கனைகளை உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் பங்குகொள்ளச் செய்வதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதுமாத்திரமின்றி, இம்முறை உலகக் கிண்ணத்துக்கு இலங்கையில் உள்ள அதிசிறந்த 12 வலைப்பந்தாட்ட வீராங்கனைகளை கொண்டுசெல்வது தான் எனது எதிர்பார்ப்பாகும். அதன் காரணமாகவே வலைப்பந்தாட்ட அணியைத் தெரிவுசெய்து பயிற்சிப் போட்டிகளை நடத்தியிருந்தோம். இதன் மூலம் 5 புதுமுக வீராங்கனைகளை அணிக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

இதேநேரம், ஏற்கனவே கூறிய இரண்டு வீராங்கனைகளுக்கும் சிறிய அளவில் தான் உபாதை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த இரண்டு பேரும் ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய காரணத்தால் முதலாவது தெரிவுப் போட்டியில் அவர்களை இணைத்துக் கொண்டோம். அவர்களுக்கு 2 வாரங்கள் ஓய்வு அளிக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

எனினும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தெரிவுப் போட்டிகளில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்க முடியாதவர்களை அணிக்குள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். எனவே இரண்டாவது தெரிவுப் போட்டியில் 17 வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர்.

பயிற்சிகள் எவ்வாறு இடம்பெறுகின்றன?

காலை மற்றும் மாலை என ஒவ்வொரு வாரமும் 11 பயிற்சி முகாம்கள் இடம்பெறுகின்றன. அதற்கு மேலதிகமாக தகுதிப்படுத்தல் பயிற்சிகளையும்,  வலைப் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றோம். எனினும், அதற்குப் பொருத்தமான மைதானங்களை கொழும்பில் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் வெளி மாவட்டங்களுக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்

உலக வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ……..

நீங்கள் லிவர்பூலில் உள்ள காலநிலைக்கு ஏற்ப எவ்வாறு அணியை தயார்படுத்துகின்றீர்கள்?

நாங்கள் அங்கு செல்லும்போது கோடைக்கால காலநிலை நிலவும். அதிலும் குறிப்பாக உள்ளக அரங்கில் தான் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்தக் காலப்பகுதியில் 16 முதல் 21 பாகை செல்சியஸ் வெப்பநிலை அங்கு நிலவும். அதனால் எமக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என நான் கருதவில்லை. ஆனால் அங்குள்ள உணவு விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிவரும். ஏனென்றால் ஐரோப்பிய நாடொன்றுக்குச் சென்றால் எமது நாட்டு உணவுகளை உண்பது மிகவும் கடினமாகும். இதனால் எமது வீராங்கனைகளுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.  எனினும், அவற்றை உரிய முறையில் முகாமைத்துவம் செய்தால் எமக்கு எந்தவொரு தடங்களும் ஏற்படாது என நம்புகிறேன்.

உங்களுடைய பிரதான குறிக்கோள் என்ன?

உலகக் கிண்ணப் போட்டிகளில் லீக் ஆட்டங்களில் முதல் அணியாக போட்டியை முடிப்பதே எனது இலக்காகும். முதலிரண்டு போட்டிகளையும் வெற்றி கொண்டால் அடுத்த சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற முடியும். அதனால் எனது அனைத்து முயற்சிகளும் முதலிரண்டு போட்டிகளையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே நான் இதுவரை உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்து சிந்திக்கவில்லை. மாறாக லீக் ஆட்டங்கள் தொடர்பில் தான் அதிக கவனம் செலுத்தியுள்ளேன்.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களாக எங்கு சென்று விளையாடவுள்ளீர்கள்?

தற்போது எமக்கு ஜிம்பாப்வே போன்ற ஆபிரிக்க நாடொன்றுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதுதொடர்பில் அந்த நாட்டு வலைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். ஜிம்பாப்வே அணி உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் 11ஆவது இடத்திலும், இலங்கை அணி 19ஆவது இடத்திலும் உள்ளது. எனினும், கடந்த வருடம் மாத்திரம் 30 போட்டிகளில் விளையாடிய காரணத்தால் தான் அவர்களுக்கு தரப்படுத்தலில் முன்னேற்றம் காணமுடிந்தது. ஆனால் வெறுமனே 11 போட்டிகளில் விளையாடி 19ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளோம். எனவே ஜிம்பாப்வே அணிக்கு எமக்கு சிறந்த போட்டியொன்றை கொடுக்க முடியும் என நான் நம்புகிறேன்.

நாங்கள் கடந்த வருடம் மலாவிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தோம். முடியுமானால் மறுபடியும் அங்கு செல்வதற்கு தயாராக உள்ளோம். ஏனென்றால் அங்கு வசிக்கின்ற பெரும்பாலான இலங்கையர்கள் எம்மை அங்கு வந்து விளையாடும்படி அழைப்பு விடுத்துள்ளனர். எனவே ஒரு மாற்றத்துக்காக ஜிம்பாப்வே தேசிய அணியுடன் 3 போட்டிகளில் விளையாட எதிர்பார்ததுள்ளோம். அதற்கான உறுதிப்படுத்தல் விரைவில் கிடைக்கவுள்ளது.

இதேநேரம், போட்டிகளை நடத்துகின்ற நாட்டுக்கு உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் பங்கேற்கின்ற நாடுகளுடன் டெஸ்ட் போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கு சர்வதேச வலைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு கோரிக்கையொன்றை முன்வைக்க முடியும். ஆனால் அதற்கு ஒரு தொகை பணத்தை செலவிட வேண்டும். ஏனென்றால் போட்டியில் பங்கேற்கின்ற ஒரு நடுவருக்கு நாங்கள் செலவழிக்க வேண்டும். இதனால் தரப்படுத்தலில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

பொதுவாக எமக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் மற்றும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகள் மாத்திரமே உள்ளன. இவ்விரண்டு போட்டிகள் மூலம் தான் தரப்படுத்தலில் எமது இடத்தை உறுதிசெய்ய முடியும். நாங்கள் ஏனைய நாடுகளைப் போல டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதில்லை. எனவே டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பதற்கான பொருத்தமான காலமாக இதை குறிப்பிடலாம். அவ்வாறு இல்லாவிட்டால் எம்மால் ஒருபோதும் தரப்படுத்தலில் முன்நோக்கிச் செல்ல முடியாது.

மற்றைய நாடுகள் பல்வேறு போட்டித் தொடர்களில் பங்கேற்று வருகின்றன. உதாரணமாக நியூசிலாந்து அணியைக் கூறலாம். அவர்கள் அவ்வாறுதான் தரப்படுத்தலில் முன்னிலை அணியாக வலம்வந்து கொண்டிருக்கின்றனர். எனவே தரப்படுத்தலில் பின்னிலையில் உள்ள அணிகளுக்கு டெஸ்ட் தொடர்களை நடத்துவதற்கு அதிக பணங்களை செவவிடுவதற்கு நேரிடுவதால் அந்த அணிகளுக்கு தரப்படுத்தலில் முன்னுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை வலைப்பந்தாட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த சம்மேளனத்தினால் உங்களுக்கு எவ்வாறான ஒத்துழைப்பு கிடைக்கின்றது?

ஒரு பயிற்சியாளராக எனக்கு அனைத்து ஒத்துழைப்புகளும் கிடைக்கின்றன. ஆனால் இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது பொருத்தமானது இல்லை என நான் கருதுகிறேன். ஏனென்றால் உலகக் கிண்ணத்துக்கான எமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னதாக ஆசிய வலைப்பந்தாட்டத் தொடருக்காக முன்னெடுத்த திட்டங்களில் வெற்றி கண்டதால் தான் நாங்கள் ஆசிய சம்பியனாகத் தெரிவானோம்.

வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவியும், செயலாளரும் தமது சொந்தப் பணங்களை வலைப்பந்தாட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகின்றதை நான் நன்கு அறிவேன். இதற்காக அவர்கள் பல தியாகங்களை செய்து வருகின்றனர். அத்துடன், அணியின் கௌரவத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எமது வீராங்கனைகளுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன், தேர்தலை நடத்த வேண்டாம் என நான் கூறவில்லை. ஆனால் இந்த நாட்டிலுள்ள விளையாட்டுச் சங்கங்களில் ஒன்றாக நாங்களும் சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும். எனினும், உலகக் கிண்ணத்துக்கான எமது திட்டங்களை நடைமுறைப்படுத்த அவற்றில் ஒருசில மாற்றங்களை செய்தால் தவறு கிடையாது. என்பது எனது நிலைப்பாடாகும்.

சென்னையின் சவாலை எதிர்கொள்ள கொழும்பு கால்பந்து கழகம் தயார்

கிரிக்கெட்டில் இருந்த பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியில் அதன் தேர்தல் நடைபெற்றதாக பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர். ஆனால் கிரிக்கெட்டும், வலைப்பந்தாட்டமும் முற்றிலும் வேறுபட்ட விளையாட்டாகும். கிரிக்கெட் நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலை செய்கின்ற ஊழியர்கள் உள்ளனர். ஆனால் எமது சங்கத்தில் தன்னார்வத்துடன் முன்வந்து சேவை செய்கின்றவர்கள் தான் உள்ளனர். அவர்களுக்கு மைதானமொன்று இல்லையென்றால் அடுத்த நிமிடத்தில் யாரையாவது தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து விடுகின்றனர்.  எனவே இவ்விரண்டு விளையாட்டினதும் நிர்வாகம் முற்றிலும் வேறுபட்டது. எனவே இவ்விரண்டையும் தயவுசெய்து ஒப்பிட வேண்டாம். பெரும்பாலானோர் அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கின்றனர். ஆனால் இலங்கையில் மற்றைய எல்லா விளையாட்டையும் காட்டிலும் கிரிக்கெட் தான் முன்னிலையில் உள்ளது. அது தொழில்முறை கிரிக்கெட் என்பதால் தனியொரு நிறுவனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் எம்மைப் போன்ற சங்கங்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<