பலவாறு அலங்கரிக்கப்பட்ட காலி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம்

511

விற்றுத்தீர்ந்த நுழைவுச்சீட்டுக்கள், இலங்கை அணியின் தொடக்க ஆதிக்கம், களத்தடுப்பு குளறுபடிகள், காய சமிஞ்சைகள், இங்கிலாந்து அணியின் பதிலடி என்பவை இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான காலி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தினை அலங்கரித்திருந்தன.  

அறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட்..

நீங்கள் கிரிக்கெட் இரசிகர் என்றால் உங்களுக்கு துணைக்கண்ட நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டி ஒன்று நடைபெறும் போது அதனைக் கண்டுகளிக்க பார்வையாளர்கள் குறைவாகவே வருவார்கள் என்பது தெரிந்திருக்கும். ஆனால், இங்கிலாந்து அணி துணைக்கண்ட நாடுகளில் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடும் போது அரங்கு முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பி வழிவதனை காணக்கூடியதாக இருக்கும்.

இதற்கு காரணம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகின் எந்த நாட்டில் விளையாடிய போதிலும் அவ்வணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க போட்டி நடைபெறும் இடத்திற்கே கிரிக்கெட்டை விரும்பும் இங்கிலாந்து இரசிகர்கள் படையெடுத்து விடுவதாகும்.

காலி டெஸ்ட் போட்டியிலும் இதே நிலைமையே, கிட்டத்தட்ட ஐம்பது பஸ் வண்டிகளில் வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நேரகாலத்துடனேயே இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியினை பார்ப்பதற்காக நுழைந்து விட்டனர்.

குறித்த டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆதரவாளர்கள் குறைவாகவே இருந்த போதிலும், காலி மைதானத்தில் இருந்த புற்தரைகள் இங்கிலாந்து அணியின் இரசிகர்களால் நிரம்பி வழிந்ததனை காணக்கூடியதாக இருந்தது. ஆனால், இலங்கை இரசிகர்கள் அவ்வளவு குறைவாக வந்திருந்தனர் என்றும் கூறிவிட முடியாது. இப்போட்டி இலங்கை அணியின் நட்சத்திர சுழல் வீரரான  ரங்கன ஹேரத்தின் கடைசி சர்வதேச போட்டி என்பதால் ஹேரத்திற்கு நன்றி தெரிவித்து விஷேட டி-ஷேர்ட்களை அணிந்தவாறு சில இலங்கை ஆதரவாளர்கள் அரங்கில் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல சுவாரசியங்கள் நிறைந்த இப்போட்டியின் கதாநாயகராக மாறியது இங்கிலாந்து அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் பென் போக்ஸ் மட்டுமே. கடந்த வாரமே இலங்கைக்கு வந்திருந்த போக்ஸ் இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியில் ஆடுவார் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். அதன்படி இந்த டெஸ்ட் போட்டியின் மூலமே சர்வதேச அரங்கில் அறிமுகமான போக்ஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் ஆட்ட நாயகன் என்று குறிப்பிடும் அளவிற்கு சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட்காப்பு வீரரான அலெக்ஸ் ஸ்டூவார்ட்டினால் உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர் என போற்றுதலைப் பெற்ற போக்ஸ், இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் 7ஆம் இலக்கத்தில் மிக கச்சிதமாக துடுப்பாடி தனது அடுத்த பரிமாணத்தை காட்டியிருக்கின்றார்.

இப் போட்டியில் சதம் கடந்த போக்ஸ் ஒரு கட்டத்தில் 103 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட தனது தரப்பினை ஆட்டத்தின் முதல் நாள் நிறைவுக்கு வரும் போது 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களைப் பெறும் ஸ்திர நிலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

போட்டியின் முதல் இடைவெளியில் இலங்கையின் சுழல் வீரர்கள் சிறப்பாக செயற்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு இலங்கையின் சுழல் வீரர்களை எதிர்கொள்வதே பாரிய சவாலாக அமைந்தது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் இலங்கையின் சுழல் வீரர்களை தடுக்க முயற்சிகள் செய்த போதிலும் அந்த முயற்சி வீணாகி முதல் நாள் மதிய போசனத்தை அடுத்து பின்னர் அவரின் விக்கெட் பறிபோனது.

ரோஹித் ஷர்மாவின் சாதனையுடன் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு..

ஆனால் முதல் நாளுக்குரிய போட்டியின் இறுதி இரண்டு இடைவெளிகளிலும் நுணுக்கமாக செயற்பட்ட இங்கிலாந்து அணி வித்தியாசமான துடுப்பாட்ட பாணியொன்றுடன் இலங்கை அணியின் சுழல் வீரர்களை சமாளித்திருந்தது.  இலங்கை அணியின் சுழல் வீரர்களை சமாளிப்பதில் போக்ஸ் முக்கிய பங்களிப்பை வழங்கினார். இதற்காக ஜோஸ் பட்லர், சேம் குர்ரன், ஆதில் ரஷீத் ஆகியோருடன் ஜோடி சேர்ந்த போக்ஸ் ஒவ்வொரு வீரருடனும் அரைச்சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சுழல் வீரர்களுக்கான சாதக நிலைமைகள் உள்ள காலி மைதானத்தில் சிரேஷ்ட வீரர்கள் எப்படி ஆடுவார்களோ அப்படியாக தனது கன்னி சர்வதேச போட்டியில் பென் போக்ஸ் ஆடினார்.

கடந்த காலங்களில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வீரராக இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்திருந்த போக்ஸ், இலங்கையின் உள்ளூர் அணிகளில் ஒன்றுக்கும் முன்னதாக ஆடியிருந்தார். இதுவே போக்ஸிற்கு இலங்கை ஆடுகளங்களின் தன்மையை அறிந்து ஆட காலி டெஸ்ட் போட்டியில் உதவியாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

“ இங்கே (இலங்கைக்கு) சில தடவைகள் வந்தது நல்ல அனுபவம் ஒன்றினை பெற்றுத்தந்தது. லயன்ஸ் அணியின் (இலங்கை) சுற்றுப் பயணமும் உண்மையில் நல்லபடியாக இருந்தது. நான் தில்ருவான் பெரேரா, அகில தனன்ஞய ஆகியோர் விளையாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் அணிக்காகவும் சில காலம் விளையாடி இருந்தேன். அப்போது அவர்கள் பற்றி கற்றுக்கொண்டவை சிறப்பாக இருந்ததுடன், எனக்கு (இப்போட்டியில்) சிறப்பாக ஆடுவதற்கும் அது உதவியாக இருந்திருக்கின்றது. “ என பென் போக்ஸ் பேசியிருந்தார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்தார் சிக்கர் தவான்

ஐ.பி.எல். (IPL) தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத்…

இலங்கை அணிக்கு இங்கிலாந்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு இங்கிலாந்து வீரர்கள்  103 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தே போதே உருவாகியிருந்தது. எனினும், இலங்கையின் ஸ்லிப் களத்தடுப்பாளர்கள் தவறவிட்ட பிடியெடுப்புக்களும், இங்கிலாந்தின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கை வீரர்கள் கொடுத்த ஓட்டங்களும் எதிர்தரப்பு வீரர்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பினை முழுமையாக இல்லாது செய்திருந்தன.

இதேநேரம் இலங்கை அணி போட்டியின் தொடக்கத்திலேயே தமக்கு இருந்த 2 நடுவர் தீர்ப்பு மேன்முறையீடுகளையும் வீணாக்கியது. இதுவும் இலங்கை அணி முதல் நாளின் எஞ்சிய இரண்டு இடைவெளிகளினையும் இங்கிலாந்து அணிக்கு தாரைவார்க்க மற்றுமொரு காரணமாக இருந்தது. அதேநேரம், இலங்கை அணிக்கு சுழல் வீரர்களும் எதிர்பார்த்த அளவுக்கு உபயோகம் தர தவறினர்.

“காலியில் மைதானத்தில் நாங்கள் சுழல் பந்துவீச்சாளர்களுக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் போயிருந்தன. தொடர்ச்சியாக பெய்துவந்த மழையில் (காலி) அரங்கு மூடப்பட்டு இருந்ததே இதற்கு காரணம்” என இலங்கை அணிக்காக போட்டியின் முதல் நாளில் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த தில்ருவான் பெரேரா குறிப்பிட்டிருந்தார்.

இப்படியாக இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நகர்ந்து கொண்டிருக்கையில் இலங்கை அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் கால் தசைகள் இணையும் இடத்தில் ஏற்பட்ட வலியினால் மைதானத்தை விட்டு வெளியேறினார். எனினும் அவர் இன்றைய இன்னிங்ஸில் இலங்கை அணிக்காக களம் வந்து துடுப்பாடினார்.

எது எப்படியாக இருந்தாலும் இப்போட்டியின் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி சரிவிலிருந்து மீண்டு ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பதனால், இப்போட்டி சுவராஸ்யமான ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<