அவுஸ்திரேலியாவுக்கு மிகப் பெரிய சவால் வனிந்து, மஹீஷ்

278

இலங்கை அணியில் வனிந்து மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இரண்டு உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பது தமது அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், பேர்த் ஆடுகளம் தமது அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தைக் கொடுக்கும் என அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றில் செவ்வாய்க்கிழமை பேர்த்தில் நடைபெறவுள்ள குழு 1 க்கான ஐந்தாவது போட்டியில் நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணியும் இலங்கை அணியும் தங்கள் 2ஆவது போட்டியில் மோதவுள்ளன.

சுபர் 12 சுற்றுக்கான முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவிய நிலையில், இலங்கை அணி அயர்லாந்தை வீழ்த்தியது. எனவே வரவேற்பு நாடான அவுஸ்திரேலிய அணி இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை எதிர்பார்த்து இலங்கையுடன் மோதவுள்ளது.

இந்த நிலையில், போட்டிக்கு முன்பாக திங்கட்கிழமை (24) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர்,

“நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தாலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் எங்களுடைய வழக்கமான திறமைக்கு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இலங்கை மிகவும் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்தாலும் இந்த மைதானத்தின் ஆடுகளம் அவர்களைக் காட்டிலும் எமக்கு தான் சாதகமாக இருக்கும். அதேபோல, ஆடுகளம் தொடர்பில் நல்லதொரு புரிந்துணர்வும் எமக்கு உண்டு.

இதனிடையே, இலங்கை அணியில் வனிந்து மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இரண்டு உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக, வனிந்து ஹஸரங்க சிறந்த பந்துவீச்சாளர். அவரது வித்தியாசமான நுணுக்கங்கள் எமக்கு நெருக்கடியைக் கொடுக்கும். எனினும், வனிந்து மற்றும் மஹீஷின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவிப்பதே எமது குறிக்கோளாகும். ஆனாலும், அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் எமக்கு சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமான விடயமல்ல.

எவ்வாறாயினும், பேர்த் ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் வேகப் பந்துவீச்சாளர்களுக்குத் தான் மிகப் பெரிய சாதகத்தைக் கொடுக்கும் என நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முதல் போட்டியில் விளையாடிய பதினொருவர் அணி தான் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கும் என்பதை மிட்செல் மார்ஷ் உறுதிப்படுத்தியிருந்தார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<