மழையினால் கைவிடப்பட்ட இலங்கை டெஸ்ட் அணியின் பயிற்சிப் போட்டி

220

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக பங்களாதேஷ் சென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே விளையாடிய இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி மழையின் காரணமாக சமநிலை அடைந்திருக்கின்றது.

>>இந்த இலங்கை வீரர்களை உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கலாம் – மஹேல ஜயவர்தன

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி இன்) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ள இலங்கை, தற்போது பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில், பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கை அணி பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் விளையாடிய இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நேற்று (10) டாக்காவில் ஆரம்பமாகியது.

இந்தப் போட்டியின் முதல் நாளில் மழையின் குறுக்கீடு இருந்த நிலையில், முதல் நாளில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தவாறு முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இன்று போட்டியில் இரண்டாம் நாளில் தொடர்ந்த போட்டியில் சில ஓவர்களை வீச முடியுமாக இருந்த போதும், மழையின் காரணமாக ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்ததோடு இறுதியில் போட்டி சமநிலை அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

இன்றைய நாள் ஆட்டம் சமநிலை அடையும் போது இலங்கை அணி 18.2 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 50 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்காக இன்றைய நாளில் ஆட்டமிழக்காது இருந்த வீரர்களில் ஒசத பெர்ணான்டோ 26 ஓட்டங்களைப் பெற்றிருக்க, குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் 15ஆம் திகதி சிட்டகொங்கின் ஸாஹூர் சௌத்ரி மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 50/1 (18.2) ஒசத பெர்னாண்டோ 26*, குசல் மெண்டிஸ் 22*

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<