தொடரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனித நேயம்

126

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.   

வடக்கு மக்களுக்காக உதவிக் கரம் நீட்டும் சங்கா, மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் …

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது மனித நேயப்பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.  

அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உபுல் தரங்க அம்பலாங்கொடையின் தூரப்பிரதேசம் ஒன்றில் வசிக்கும் மக்களுக்கு உதவியிருக்கின்றார்.   

உபுல் தரங்க மூலம் மிகவும் வறிய மக்கள் வசிக்கும் குறிப்பிட்ட தூரப் பிரதேசத்திற்கு அத்தியவசியப் பொருட்கள் அடங்கிய 100 பொதிகள் கையளிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

சாதாரண இடங்களினை விட, தூரப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்குவதால் உபுல் தரங்கவின் உதவி குறிப்பிட்ட பிரதேசத்தில் இருக்கும் மக்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாகவும் அமைந்திருக்கின்றது.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட  வீரருமான தினேஷ் சந்திமாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது உதவிக்கரத்தினை நீட்டியிருக்கின்றார். 

தினேஷ் சந்திமால் தனது தனிப்பட்ட நிதி மூலம் தலங்கம-கொஸ்வத்த பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு தொகை உணவுப் பொருட்களை கடந்த செவ்வாய்க்கிழமை (31) வழங்கியிருந்தார்.

அதோடு, இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண நாயகன் ரொஷான் மஹநாம, முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் ஆகியோரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகளை கொடுத்து உதவி செய்திருக்கின்றனர். 

இந்த இரண்டு வீரர்களும் Dr. கிரிஷான் தலகாகே என்னும் நபரின் எண்ணக்கருவிற்கு அமைவாக உருவாக்கப்பட்ட திட்டம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு உருகொடவத்த பகுதியினைச் சேர்ந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை நேற்று (2) வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நாளாந்தம் உழைப்பவர்களுக்கு உதவ முன்வந்திருக்கும் மஹாநாம, வாஸ் ஜோடி

கொரோனா வைரஸினால் இலங்கையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது…

இந்த வீரர்கள் மட்டுமில்லாது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோரும் பொது மக்களுக்கான அத்தியவசியப் பொருட்களை வழங்கியிருந்தனர்.

பொது மக்களுக்கான உதவிகள் ஒருபுறமிருக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீரர்கள் கொரோனா வைரஸிற்கு எதிராக போராட்டத்திற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதி உதவிகளை அளித்திருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இலங்கை ஜனாதிபதியின் சுகாதார மற்றும் சமூகப்பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு தொகை பணத்தினை நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.    

இவ்வாறாக இக்கட்டான நேரத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் செயற்பாடுகள் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயுமான அவர்களின் கனவான் தன்மையினை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…