பந்து சேதப்படுத்தல் சர்ச்சையைத் தாண்டி மூன்றாம் நாள் ஆதிக்கம் இலங்கை வசம்

1121
Image Courtesy - AFP

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே சென். லூசியா நகரில் நடைபெற்று வருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணி பந்தின் தன்மையை மாற்றியதாக கூறி சர்ச்சையொன்று எழுப்பப்பட்டிருந்தது. இந்த சர்ச்சை ஒருபுறமிக்க இலங்கை அணி வீரர்கள் மூன்றாம் நாளுக்கான ஆட்டத்தின் ஆதிக்கத்தை வேகப்பந்து வீச்சாளர்களின் துணையோடு தமக்கு சொந்தமாக்கியிருக்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமை (14) சென். லூசியா நகரில் ஆரம்பமாகிய இந்த டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் (15) நிறைவின் போது இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை (253) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 118 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு டெவோன் ஸ்மித் அரைச்சதம் (53) ஒன்றை தாண்டிய நிலையிலும், ஷாய் ஹோப் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

அரைச்சதம் கடந்த ஸ்மித்; இரண்டாம் நாளில் மழை குறுக்கீடு

எனினும், போட்டியின் நேற்றைய (16) ஆட்டத்தின் மூன்றாம் நாளில் இலங்கை வீரர்கள் பந்தின் தன்மையை மாற்ற முயன்றனர் என குற்றச்சாட்டு ஒன்று நடுவர்களால் வைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை நிராகரித்து இலங்கை அணித்தரப்பு மைதானத்திற்குள் வந்து பந்து வீசுவதற்கு மறுத்தது. இந்த சர்ச்சையான சம்பவத்தினால் மூன்றாம் நாளுக்கான போட்டியின் ஆட்டம் வழமையான நேரத்தினை விட கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலம் தாமதித்தே தொடங்கியிருந்தது. சர்ச்சையின் முடிவில், இலங்கை அணி பந்தின் தன்மையை மாற்றிய குற்றம் உறுதி செய்யப்பட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஐந்து மேலதிக ஓட்டங்களும் (Penalty Runs) வழங்கப்பட்டிருந்தது.

போட்டி தாமதித்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கி 13.3 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் மதிய போசன இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது. மதிய போசன இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, களத்தில் இருந்த ஷாய் ஹோப்பின் விக்கெட்டை சுரங்க லக்மாலின் வேகத்திற்கு பறிகொடுத்திருந்தது. லக்மாலின் பந்தை எதிர்கொண்ட ஷாய் ஹோப் அதனை ஸ்லிப் (Slip) களத்தடுப்பாளராக இருந்த தனஞ்சய டி சில்வாவிடம் பிடிகொடுத்து 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மதிய போசனத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்காக அரைச்சதம் கடந்த டெவோன் ஸ்மித்தின் விக்கெட்டை சுழல் வீரரான அகில தனஞ்சய LBW முறையில் கைப்பற்றினார். இடதுகை துடுப்பாட்ட வீரரான டெவோன் ஸ்மித் ஆட்டமிழக்கும் போது நான்கு பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்த விக்கெட்டின் பின்னர் பந்தின் தன்மையை மாற்றிய சர்ச்சையில் முன்னதாக தாமதித்த ஆட்டம் இம்முறை சீரற்ற காலநிலை காரணமாக (மழையினால்) கொஞ்ச நேரம் தடைப்பட்டது. நிலைமைகள் சீரான பின்னர் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் புதிய துடுப்பாட்ட வீரர்களாக இருந்த ரொஸ்டன் சேஸ் மற்றும் சேன் டோவ்ரிச் ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுக்கு ஐந்தாம் விக்கெட்டுக்காக மிகவும் நல்ல இணைப்பாட்டம் (78) ஒன்றை உருவாக்கியிருந்தனர். இவர்களின் இணைப்பாட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை இலங்கையின் முதல் இன்னிங்ஸ் மொத்த ஓட்டங்களை நெருங்கவைத்தது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை

இந்த இணைப்பாட்டத்தை இந்த இன்னிங்சின் 81 ஆவது ஓவரின் பிறகு எடுக்கப்பட்ட புதிய பந்து மூலம் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார ரொஸ்டன் சேஸின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். 68 பந்துகளை எதிர்கொண்டிருந்த ரொஸ்டன் சேஸ் 41 ஓட்டங்களை தனது தரப்புக்கு பெற்றுத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சேஸின் விக்கெட்டுக்கு சில நிமிடங்களின் பின் மூன்றாம் நாளுக்கான தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது.

புதிய பந்து எடுக்கப்பட்டது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக மாறியிருந்தது. இதன்படி, தேநீர் இடைவேளைக்கு பின்னர் அரைச்சதம் எட்டிய சேன் டோவ்ரிச்சின் விக்கெட்டை இலங்கையின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் கைப்பற்றினார். விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவிடம் பிடிகொடுத்த டோவ்ரிச் 55 ஓட்டங்களை ஒரு சிக்ஸர் மற்றும் ஐந்து பெளண்டரிகள் அடங்கலாக பெற்றிருந்தார். எனினும், டோவ்ரிச்சின் அரைச்சதம் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் மொத்த ஓட்டங்களை தாண்ட உதவியது.

டோவ்ரிச்சின் விக்கெட்டை அடுத்து வந்த மேற்கிந்திய தீவுகளின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க பெரும் சிரமத்தினை எதிர்கொண்டனர். இதனால், மேற்கிந்திய தீவுகள் அணியினர் 100.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை முடித்துக் கொண்டனர்.

மிகவும் சிறப்பான பந்துவீச்சை வெளிக்காட்டி மேற்கிந்திய தீவுகளின் இறுதி ஐந்து விக்கெட்டுக்களையும் 46 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இலங்கை அணியின் பந்துவீச்சில், வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

வேகப்பந்து வீச்சாளர்களின் திறமையான செயற்பாட்டினால் 47 ஓட்டங்களினாலேயே முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகளுக்கு இலங்கை அணியை விட முன்னிலை பெற முடிந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அழைப்பை நிராகரித்த மஹேல, முரளி, மஹநாம

இதனையடுத்து, தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து காணப்படுகின்றது. இலங்கை அணியில் பறிபோயிருந்த விக்கெட்டாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா காணப்படுகின்றார். பெரேரா 20 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளரான ஷன்னோன் கேப்ரியலின் பந்தினை எதிர்கொண்டு அதனை விக்கெட் காப்பாளர் சேன் டோவ்ரிச்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

களத்தில் மஹேல உடவத்த 11 ஓட்டங்களுடனும், இரவுநேர காவலாளியான (Night Watchman) கசுன் ராஜித ஓட்டமேதுமின்றியும் நிற்கின்றனர். மூன்றாம் நாளுக்கான ஆட்ட நிறைவின் படி, இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளை விட 13 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கி காணப்படுகின்றது.

ஸ்கோர் விபரம்

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.